Last Updated : 23 Dec, 2020 03:14 PM

 

Published : 23 Dec 2020 03:14 PM
Last Updated : 23 Dec 2020 03:14 PM

'சூஃபியும் சுஜாதையும்' மலையாள திரைப்பட இயக்குநர் ஷாநவாஸ் மூளைச்சாவு: மருத்துவர்கள் தகவல்

இயக்குநர் ஷாநவாஸ்

கோவை

'சூஃபியும் சுஜாதையும்' மலையாள திரைப்பட இயக்குநர் ஷாநவாஸ் மூளைச்சாவு அடைந்ததாக, தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள திரையுலகில் எடிட்டராக கால் பதித்தவர் ஷாநவாஸ். ஏராளமான மலையாள திரைப்படங்களில் எடிட்டராக பணிபுரிந்த இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாக 'கரி' என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் பெரும் வெற்றியடையாவிட்டாலும் சினிமா விமர்சகர்களின் ஆதரவு கிடைத்தது.

இந்நிலையில், பிரபல நடிகர் ஜெயசூர்யாவை நாயகனாக வைத்து, 'சூஃபியும் சுஜாதையும்' என்ற பெயரில் படத்தை இயக்கினார். இந்தப் படம் வெளியாக தயாராக இருந்தநிலையில், கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டன.

இதையடுத்து, இந்த படத்தை ஓடிடி-யில் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு மலையாள திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்பையும் மீறி இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு பலரின் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இந்தப் படத்தின் இயக்குநர் ஷாநவாஸ், தனது அடுத்த படத்திற்காகக் கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இதற்காக பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் தங்கியிருந்தார். அங்கு கடந்த 19-ம் தேதி இரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அவரை உடனடியாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று (டிச. 23) காலை ஷாநவாஸ் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x