Published : 22 Dec 2020 04:01 PM
Last Updated : 22 Dec 2020 04:01 PM

விக்னேஷ் சிவன் - நயன் ஜோடி கைப்பற்றிய கூழாங்கல்

சென்னை

விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி இணைந்து 'கூழாங்கல்' என்ற படத்தின் முழு தயாரிப்புக்கும் பொறுப்பேற்றுள்ளது.

மிலந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெற்றிக்கண்' படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தையும் விக்னேஷ் சிவன் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார்.

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து, இதர நடிகர்கள் நடித்த நல்ல படங்களையும் வாங்கி வெளியிட விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி முடிவு செய்துள்ளது. முதலில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ராக்கி' படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றியது.

அதனைத் தொடர்ந்து யுவன் இசையமைப்பில் உருவாகியுள்ள 'கூழாங்கல்' படத்தின் உரிமையைக் கைப்பற்றியுள்ளது விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி.

இது தொடர்பாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

"மிக அரிதான ஒரு நாள்தான். ஒரு படைப்பைப் பார்த்து வியந்து, நாம் இருக்கும் துறையை நினைத்துப் பெருமைகொள்ளும் எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நாளாக, இறுதிக்கட்டப் பணிகளில் இருந்த 'கூழாங்கல்' எனும் திரைப்படத்தைப் பார்த்தபோது தோன்றியது.

'கூழாங்கல்' பி.எஸ்.வினோத்ராஜின் முதல் படம். தலைப்பைப் போலவே படம் மிக எளிமையாக இருந்தாலும், அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. முழுக்க முழுக்க திறமையான புதுக் குழுவினராலும் நடிகர்களாலும் இயக்குநராலும் உருவான இத்திரைப்படத்தைப் பார்த்து பாராட்டுகளோடு மட்டும் நிற்காமல், தன்னுடைய பின்னணி இசையால் கூழாங்கல்லின் ஆன்மாவை மீட்டெடுத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

இப்படத்தின் மூலமாக எங்களுக்குக் கிடைத்த திரை அனுபவத்தை நம் மக்கள் அனைவருக்கும் வழங்குவது மட்டுமல்லாது, சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கொண்டு செல்வது என முடிவு செய்து இப்படத்தின் முழு தயாரிப்பைப் பொறுப்பேற்றுள்ளோம்.

உங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இத்திரைப்படத்தை உங்களுக்காக வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்".

இவ்வாறு ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், 'கூழாங்கல்' படத்தின் உரிமையைக் கைப்பற்றியிருப்பது தொடர்பாக விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பிஎஸ் வினோத் ராஜ் இயக்கிய இந்தத் தரமான படத்தைத் தயாரித்ததில் மகிழ்ச்சி. நயன்தாரா, தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, தயாரித்து, வழங்க வேண்டும் என்கிற உங்கள் எண்ணம் எனக்கு மகிழ்ச்சியையும், ஆர்வத்தையும் தருகிறது. திரைப்பட விழாக்களில் நமக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கட்டும். நன்றி யுவன் சார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

— Vignesh Shivan (@VigneshShivN) December 22, 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x