Published : 21 Dec 2020 06:48 PM
Last Updated : 21 Dec 2020 06:48 PM

கிறிஸ்துமஸ் அலங்காரம் செய்யும்போது சோகம்: கீழே விழுந்து சினிமா ஒப்பனைக் கலைஞர் மரணம்

கேரளத் திரையுலகில் ஒப்பனைக் கலைஞராக இருந்த ஷபு புல்பள்ளி காலமானார். அவருக்கு வயது 37.

நடிகர் நிவின் பாலி உள்ளிட்ட பல மலையாளத் திரைப்பட நடிகர்களுக்கு ஒப்பனைக் கலைஞராகப் பணிபுரிந்தவர் ஷபு. முக்கியமாக நடிகர் நிவின் பாலிக்கு 2012ஆம் ஆண்டிலிருந்தே ஆஸ்தான ஒப்பனை செய்யும் கலைஞர் இவர்தான். நிவினின் உதவியாளராகவும் இருந்து வந்தார். கடைசியாக நிவின் பாலி, டிசம்பர் 12ஆம் தேதி, தான் நடித்துக் கொண்டிருந்த 'கனகம் காமினி கலகம்' என்கிற படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு பற்றி பதிவிட்டிருந்தபோது அதில் ஷபுவையும் குறிப்பிட்டே பதிவிட்டிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று தனது இல்லத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அலங்காரம் செய்யும் வேலைகளில் ஷபு ஈடுபட்டிருந்தார். அப்போது கிறிஸ்துமஸ் மரத்தின் உச்சியில் நட்சத்திரம் கட்டிவைக்க உயரத்தில் ஏறியபோது நிலை தடுமாறிக் கீழே விழுந்தார். நினைவிழந்த ஷபுவைக் குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

ஷபுவுக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஷபு உயிரிழந்தைத் தொடர்ந்து பல்வேறு கலைஞர்கள் அவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கேரளத் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றைப் பகிர்ந்து அஞ்சலி செலுத்தியுள்ளது.

துல்கர் சல்மான் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''ஷபு புல்பள்ளியின் திடீர் மரணத்தால் வாடும் அவரது குடும்பத்துக்கு மனமார இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். 'பெங்களூர் டேஸ்', 'விக்ரமாதித்யன்' ஆகிய படங்களில் அவருடன் பணியாற்றிய நினைவுகளை என்றும் மனதில் வைத்திருப்பேன். இந்தக் கடினமான காலகட்டத்தைக் கடக்கும் வலிமையை இறைவன் அவரது குடும்பத்துக்குத் தர வேண்டும் என்று வேண்டுகிறேன்.

படப்பிடிப்புகளில் நமக்கு உதவுபவர்கள், நம்மைப் பார்த்துக் கொள்பவர்கள், நமது குடும்பத்தில் ஒருவராக மாறி விடுவார்கள். நிவின் எவ்வளவு வருந்துவார் என்பது எனக்குப் புரிகிறது. இந்த இழப்பை ஈடு செய்யவே முடியாது என்று எனக்குக் கண்டிப்பாகத் தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x