Published : 15 Dec 2020 06:23 PM
Last Updated : 15 Dec 2020 06:23 PM

சுமார் 300 திரையரங்குகள் மூடல்: 'மாஸ்டர்' கை கொடுக்குமா? திரையரங்க உரிமையாளர்கள் காத்திருப்பு

சென்னை

தமிழகத்தில் தொடர்ச்சியாகத் திரையரங்குகள் மூடப்பட்டு வருவது, தமிழ்த் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் 8 மாதங்களுக்குப் பிறகு நவம்பர் 10-ம் தேதிதான் திரையரங்குகள் திறக்கப்பட்டன. இதனால் தமிழ்த் திரையுலகினர் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ச்சியாகப் படங்களை வெளியிடத் திட்டமிட்டு பணிகளைத் தொடங்கினார்கள்.

'பிஸ்கோத்', 'இரண்டாம் குத்து', 'மரிஜூவானா', 'தட்றோம் தூக்றோம்' உள்ளிட்ட பல படங்கள் வெளியாகின. ஆனால், கரோனா அச்சுறுத்தல் தற்போது குறைந்திருந்தாலும் இன்னும் முழுமையாக விலகிவிடவில்லை. இதனால், மக்கள் கூட்டம் எதிர்பார்த்த அளவுக்குத் திரையரங்குகளுக்கு வரவில்லை. இதனால், பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

திரையரங்கு உரிமையாளர்கள் அனைவருமே 'மாஸ்டர்' படத்தைத்தான் எதிர்நோக்கியுள்ளனர். அந்தப் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவுவதால் கண்டிப்பாக மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இதனால், திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு அனுமதி என்பதை 75% ஆகக் கூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் ஊழியர்களுக்குச் சம்பளம், கரண்ட் பில் எனச் செலவைக் குறைக்கலாம் என்று பல்வேறு ஒற்றைத் திரையரங்குகளை மூடிவிட்டார்கள். இப்படி மூடப்பட்ட திரையரங்குகளின் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் சுமார் 300 வரை இருக்கும் என்கிறது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்.

இது தொடர்பாக முன்னணித் திரையரங்க உரிமையாளர் ஒருவரிடம் கேட்டபோது, "பெரிய நடிகர்களின் படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. சிறுசிறு படங்கள்தான் வெளியாகி வருகின்றன. அதற்கு எதிர்பார்த்த மக்கள் கூட்டம் வரவில்லை. சமீபத்தில் வெளியான ஒரு படத்துக்குத் தமிழகம் முழுக்க அனைத்துத் திரையரங்குகளிலிருந்தும் வந்த வசூல் என்பது 10 லட்ச ரூபாய்க்கும் குறைவுதான். வசூல் பெருமளவு குறைவதால், சில படங்கள் வெளியிடுவதற்குத் தயங்குகிறார்கள்.

'மாஸ்டர்' வெளியாகும்போது, திரையரங்குகளைத் திறந்து கொள்ளலாம் என்று மூடிவிட்டார்கள். ஏனென்றால் விஜய் படம் என்பதால் கண்டிப்பாக மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள். அந்தப் படத்துக்குப் பிறகு, 15 நாட்களுக்கு ஒரு முறை மக்களைத் திரையரங்கிற்கு வரவைப்பது போன்ற படங்கள் வெளியாக வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே மக்கள் மீண்டும் திரையரங்கிற்குத் தொடர்ச்சியாக வரப் பழகுவார்கள்.

இப்போதுள்ள சூழல்படி சுமார் 300 திரையரங்குகள் வரை மூடிவிட்டார்கள். மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை. அவர்களால் சமாளிக்க முடியும். ஆனால், ஒற்றைத்திரையரங்க முதலாளிகளால் சமாளிக்க முடியாது என்பதுதான் காரணம்" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

திரையரங்குகள் மூடப்பட்ட விவகாரம், தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 'மாஸ்டர்' படம்தான் திரையரங்க உரிமையாளர்களுக்குக் கைகொடுக்கும் என்பது தமிழ்த் திரையுலகினரின் நம்பிக்கை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x