Published : 14 Dec 2020 12:57 PM
Last Updated : 14 Dec 2020 12:57 PM

சூர்யா தயாரிப்பில் நடிகராக அறிமுகமாகும் அருண் விஜய் மகன்

சென்னை

சூர்யா தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் அருண் விஜய்யின் மகன் ஆர்னவ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

நாயகனாக நடித்து வருவது மட்டுமன்றி, பல்வேறு படங்களைத் தயாரித்தும் வருகிறார் சூர்யா. 'பொன்மகள் வந்தாள்' படத்தைத் தொடர்ந்து, 2டி நிறுவனம் தயாரிப்பில் பல்வேறு படங்கள் தயாரிப்பில் உள்ளன. இன்று (டிசம்பர் 14) 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தை சரோவ் சண்முகம் இயக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக கோபிநாத், இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டராக மேகா ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இந்தப் படத்தின் பூஜை இன்று (டிசம்பர் 14) சென்னையில் நடைபெற்றது.

இதில் அருண் விஜய்யின் மகன் ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். அவருடன் பல்வேறு குழந்தைகளும் நடிக்கவுள்ளனர்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் சரோவ் சண்முகம் கூறியிருப்பதாவது:

"குழந்தைகளை மையப்படுத்திய குடும்பப் படங்கள் ஹாலிவுட்டை ஒப்பிடும்போது நம் தமிழ் சினிமாவில் மிகவும் அரிதானவை. நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் எப்போதும் அழகான கருத்துள்ள குடும்பப் படங்களை உலக அளவிலான ரசிகர்கள் கொண்டாடும் வண்ணம் தந்து வருகிறது. அந்த வகையில் இப்படமும் மிக அழகான குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்கும். மேலும் மாஸ்டர் ஆர்னவ் விஜய் இப்படத்தில் பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி”.

இவ்வாறு சரோவ் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் குறித்து 2டி நிறுவனத்தின் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் கூறியதாவது:

"குழந்தைகளை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் ஆர்னவ் விஜய்யை அறிமுகப்படுத்துவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இப்படம் அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் படமாக இருக்கும். இப்படத்தின் திரைக்கதை என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. இக்கதை ஒரு சிறுவனுக்கும் அவனது நாய்க்குட்டிக்கும் உள்ள அழகான உறவையும், அவர்களுக்கு இடையேயான அன்பையும், உணர்வையும் வெளிப்படுத்தும் படம்".

இவ்வாறு ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் ஒட்டுமொத்தக் கதையுமே ஊட்டியின் பின்னணியில் நடப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்புக்காகப் படக்குழுவினர் விரைவில் ஊட்டிக்குப் பயணிக்கவுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x