Published : 11 Dec 2020 02:26 PM
Last Updated : 11 Dec 2020 02:26 PM

சித்ரா மறைவு குறித்து உருக்கம்; வீடியோவில் தேம்பி அழுத 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன்

சென்னை

சித்ராவின் மரணம் தொடர்பாக, குமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீர் மல்கப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனியார் ஹோட்டலில் சித்ராவுடன் தங்கியிருந்த கணவர் ஹேமநாத், அவருடன் நடித்த நடிகர்கள் அனைவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

நேற்று (டிசம்பர் 10) சித்ராவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின்பு, அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையின் முதல்கட்ட தகவலின்படி சித்ரா தற்கொலைதான் செய்துகொண்டுள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.

மாலையில் 5:50 மணியளவில் வேளச்சேரி மின் மயானத்தில் சித்ராவின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவருடைய உடலுக்கு அவருடன் பணிபுரிந்த நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருமே கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில், 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் சித்ராவுக்கு ஜோடியாக நடித்த குமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேம்பித் தேம்பி அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"அனைவருக்கும் வணக்கம். சித்ரா எப்படி இறந்தார் என்பதைப் பற்றிப் பேச வரவில்லை. அதைப் பற்றிப் பேசி அவர் திரும்ப வந்துவிடப் போவதில்லை என்பதால் அதைப் பேச விரும்பவில்லை. ஆனால், யாராவது ஒரு நல்ல நண்பரிடம் பெர்சனல் விஷயங்களைப் பகிர்ந்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் இதைத் தடுத்திருக்கலாமோ, தற்கொலை மனநிலையிலிருந்து வெளியே வந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

சித்ரா பன்முகத் திறமை கொண்டவர். ஒரே நாளில் பல்வேறு வேலைகள் செய்வார். அப்படியிருந்தும் சித்ராவின் அதிகமான நேரங்கள் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில்தான் இருக்கும். அதில் நிறையப் பேசுவோம். அப்போது, என்னிடம் " 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலுக்கு நாளை தேதி கொடுத்துள்ளீர்களா" என்று கேட்பார். நான் பெரும்பாலும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலுக்குத்தான் தேதிகள் கொடுப்பேன். முழு நேரமும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில்தான் இருப்பேன். வெளியே செல்லும் நேரமெல்லாம் ரொம்பவே குறைவு.

ஆனால், சித்ரா அப்படியல்ல. நிறைய நிகழ்ச்சிகள் எல்லாம் செய்து கொண்டிருந்தார். நான் "நாளை தேதிகள் கொடுத்திருக்கிறேன் என்றவுடன், உங்களால்தான் பிரச்சினையே வருகிறது. எப்போது தேதிகள் கேட்டாலும் கொடுத்துவிடுகிறீர்கள்" என்று சொன்னார். சித்ராக்கு பிரேக் கிடைத்தால் வேறு ஏதாவது நிகழ்ச்சி பண்ணலாம் என்றுதான் நினைப்பார்.

ரொம்ப பிஸியான நடிகை, ஓய்வே இல்லாமல் இருந்தார். அதைத்தான் அவர் மிகவும் விரும்பினார். தற்போது அவருக்கு ஒரு பெரிய ஓய்வு கிடைத்துள்ளது".

இவ்வாறு குமரன் கண்ணீர் மல்கப் பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x