Published : 10 Dec 2020 10:48 PM
Last Updated : 10 Dec 2020 10:48 PM

ரசிகர்களின் தொடர் தொந்தரவு; அஜித்- போனிகபூர் முடிவுக்கு மதிப்பு தரவும்: 'வலிமை' படக்குழு வேண்டுகோள்

ரசிகர்களின் தொடர் தொந்தரவால், முறையான அறிவிப்பு வரும்வரை காத்திருக்கவும் என்று 'வலிமை' படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. விரைவில் ஹைதராபாத்தில் அடுத்தகட்டப் படப்பிடிப்புக்குத் தயாராகி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது அஜித்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

இதுவரை 'வலிமை' படக்குழுவினர் தரப்பிலிருந்து படப்பூஜை அன்று மட்டுமே அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியானது. அதற்குப் பிறகு எந்தவொரு தகவலையுமே படக்குழு வெளியிடவில்லை. படப்பிடிப்புத் தளத்திலிருந்து புகைப்படங்கள் மட்டுமே அவ்வப்போது வெளியாகி வந்தன.

இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர். சில நாட்களில் 'வலிமை' அப்டேட் வேண்டும் என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வந்தனர். மேலும், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் வெளியிடும் இதர தகவலுக்குக் கீழே பின்னூட்டங்களில் 'வலிமை' அப்டேட் வேண்டும் எனப் பதிவிடத் தொடங்கினார்கள்.

இந்தப் போக்கு அதிகரிக்கவே, 'வலிமை' படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது:

" 'வலிமை' அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு, படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களைக் கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் அஜித் குமார், அனுபவமிக்க தயாரிப்பாளர் போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து 'வலிமை' அப்டேட் குறித்து முடிவெடுத்து தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள்.

முறையான அறிவிப்பு வரும்வரை காத்திருக்கவும். அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும்".

இவ்வாறு 'வலிமை' படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x