Published : 09 Dec 2020 04:06 PM
Last Updated : 09 Dec 2020 04:06 PM

'கர்ணன்' படப்பிடிப்பு நிறைவு: இறுதிக்கட்டப் பணிகள் தொடக்கம்

'கர்ணன்' படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததை முன்னிட்டு இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கர்ணன்'. இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, கெளரி கிஷன், லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தாணு தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இதன் பெரும்பகுதி படப்பிடிப்பைத் திருநெல்வேலிக்கு அருகில் பிரம்மாண்டமான கிராமம் போன்ற அரங்குகள் அமைத்துப் படமாக்கியுள்ளனர். அந்த அரங்கில் மட்டுமே சுமார் 90% படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டது படக்குழு. கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கப்பட்டபோது, சென்னையிலேயே அரங்குகள் அமைத்து சில முக்கியமான காட்சிகளைப் படமாக்கியது படக்குழு. அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலியில் உள்ள அரங்குகளில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கினார்கள். இன்றுடன் அந்தப் படப்பிடிப்பும் முடிவடைந்தது.

இதுகுறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

" 'கர்ணன்' படப்பிடிப்பு முடிந்தது. எனக்கு இந்தப் படத்தைத் தந்த மாரி செல்வராஜுக்கு நன்றி. தாணுவின் ஆதரவுக்கு நன்றி. எனது அத்தனை சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள். இந்த மிக விசேஷமான படத்துக்கு மகிழ்ச்சியில் மூழ்கடிக்கும் இசையைத் தந்த சந்தோஷ் நாராயணனுக்கு விசேஷ நன்றிகள்".

இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.

தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தப் படக்குழு முடிவு செய்துள்ளது.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகும் 'அத்ரங்கி ரே' படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் தனுஷ். அந்தப் படத்தை முடித்துவிட்டு, கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x