Published : 08 Dec 2020 07:07 PM
Last Updated : 08 Dec 2020 07:07 PM

சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி, குழந்தைக்குக் கரோனா தொற்று

பெங்களூரு

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி, குழந்தைக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரபல கன்னட நடிகர் சுந்தர் ராஜ், 'வைதேகி காத்திருந்தாள்' படத்தில் அறிமுகமான நடிகை பிரமிளா ஜோஷி தம்பதியினரின் ஒரே மகள் மேக்னா ராஜ். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு மேக்னா ராஜ், நடிகர் அர்ஜுனின் உறவினரான சிரஞ்சீவி சர்ஜாவைக் காதலித்து, திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவி சர்ஜாவும், மேக்னா ராஜும் இணைந்து நடித்த சில படங்கள் வெற்றிகரமாக ஓடின. மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.

அக்டோபர் 22-ம் தேதி மேக்னா ராஜுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிரஞ்சீவி சர்ஜாவே மகனாகப் பிறந்துள்ளார் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். இந்நிலையில், மேக்னா ராஜின் குடும்பத்தினர் மற்றும் மகனுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேக்னா ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"என் அம்மா, அப்பா, எனக்கு என் குழந்தைக்கு என அனைவருக்கும் கோவிட் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த சில வாரங்களில் எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரிடமும் எங்கள் தொற்றைப் பற்றித் தெரிவித்துவிட்டோம்.

சிருவின் ரசிகர்களும், எனது ரசிகர்களும் கவலை கொள்ள வேண்டாம். நாங்கள் அனைவரும் தற்போது நலமாக இருக்கிறோம். சிகிச்சை மேற்கொண்டிருக்கிறோம். குட்டி சிரஞ்சீவி நலமாக இருக்கிறார். ஒவ்வொரு நொடியும் எனக்கு வேலை வைத்துக்கொண்டே இருக்கிறார். ஒரு குடும்பமாக நாங்கள் இந்தப் போரில் போராடி, வெற்றியுடன் வெளியே வருவோம்".

இவ்வாறு மேக்னா ராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x