Published : 07 Dec 2020 01:27 PM
Last Updated : 07 Dec 2020 01:27 PM
விவசாயிகளின் பயத்தைப் போக்க வேண்டும் என்று நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த செப்டம்பரில் 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இந்தச் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு 12-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு 5 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.
குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரவும், சட்டங்களில் தேவையான திருத்தங்கள் செய்யவும் மத்திய அரசு முன்வந்த போதிலும், வேளாண் சட்டங்களை முழுமையாக நீக்கும்வரை போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
விவசாயிகளின் போராட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளின் பயத்தை விரைவில் போக்க வேண்டும் என்று நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். பஞ்சாபி பாடகாரான திலிஜித் தோசான்ஜின் பதிவைப் பகிர்ந்துள்ள பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
''நமது விவசாயிகள்தான் இந்தியாவின் போர்வீரர்கள். அவர்களது பயத்தைப் போக்க வேண்டும். அவர்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும். ஜனநாயக நாடான நாம் இந்தப் பிரச்சினை மிக விரைவில் சரி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்''.
இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT