Published : 04 Dec 2020 06:03 PM
Last Updated : 04 Dec 2020 06:03 PM

'மாநாடு' படத்துக்குப் பின் 'முஃப்தி' ரீமேக்: சிம்பு திட்டம்

சென்னை

'மாநாடு' படத்தைத் தொடர்ந்து 'முஃப்தி' ரீமேக் பணிகளைத் தொடங்க சிம்பு முடிவு செய்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாநாடு'. டிசம்பர் 24-ம் தேதி வரை இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். இப்படத்துக்குப் பிறகு சிம்புவின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன.

தற்போது 'மாநாடு' படத்துக்குப் பிறகு 'முஃப்தி' ரீமேக்கில் உள்ள இதர காட்சிகளின் படப்பிடிப்புக்காகத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிம்பு. கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'முஃப்தி' படத்தின் ரீமேக்கை, அதன் இயக்குநர் நரதனே இயக்கி வந்தார். ஞானவேல் ராஜா தயாரித்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் தொடங்கப்பட்டது.

சிம்பு சரியாகப் படப்பிடிப்புக்கு வருவதில்லை, தயாரிப்பு நிறுவனத்துடன் மோதல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதற்குப் பிறகு உடம்பைக் குறைத்து இதர படங்களில் சிம்பு கவனம் செலுத்தி வந்தார். தற்போது அனைத்துச் சிக்கல்களும் பேசித் தீர்க்கப்பட்டன.

இதனால், 'மாநாடு' படத்தை முடித்துவிட்டு 'முஃப்தி' தமிழ் ரீமேக்கில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிம்பு. மீதமுள்ள காட்சிகளை 'சில்லுனு ஒரு காதல்' கிருஷ்ணா இயக்கவுள்ளார். ஏனென்றால், 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்தைத் தொடர்ந்து யஷ் நடிக்கவுள்ள படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் இயக்குநர் நரதன்.

டிசம்பருக்குள் 'மாநாடு' படத்தை முடித்துவிட்டு, ஜனவரியில் 'முஃப்தி' தமிழ் ரீமேக் படப்பிடிப்பில் சிம்பு கலந்துகொள்வார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x