Published : 04 Dec 2020 01:17 PM
Last Updated : 04 Dec 2020 01:17 PM

'மாஸ்டர்' வெளியீட்டுத் தேதி முடிவு: இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழுவினர் மும்முரம்

'மாஸ்டர்' வெளியீட்டுத் தேதி முடிவானதால், படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. கரோனா அச்சுறுத்தலால் சுமார் 8 மாதங்களாக வெளியாகாமல் உள்ளது. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இப்படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையை லலித் குமார் கைப்பற்றியுள்ளார்.

பல்வேறு ஓடிடி நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், திரையரங்க வெளியீட்டில் உறுதியாக உள்ளது படக்குழு. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ளதாலும், ஓடிடியில் வெளியிடாமல் காத்திருப்பதாலும் திரையரங்கு உரிமையாளர்கள் 'மாஸ்டர்' படத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

ஜனவரி 13-ம் தேதி வெளியிடலாம் என்று நினைத்துப் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. தற்போது அந்தத் தேதியை முடிவு செய்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது படக்குழு. 'மாஸ்டர்' படத்தைப் பொறுத்தவரை அனைத்துப் பணிகளுமே முடிவடைந்துவிட்டாலும், இறுதி வடிவத்தை எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சுமார் 80%க்கும் அதிகமான திரையரங்குகளை 'மாஸ்டர்' படத்துக்கு ஒதுக்க திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். தற்போது திரையரங்குகளில் 50% மக்களே படம் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை 75% ஆக உயர்த்த தமிழக அரசுக்கு 'மாஸ்டர்' படக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தத் தகவலை அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதி செய்துள்ளார்.

ஜனவரி 13-ம் தேதி 'மாஸ்டர்' வெளியீடு என்பது உறுதியாகிவிட்டது. விரைவில் தமிழகத்தில் திரையரங்குகளில் 75% மக்கள் வருகைக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x