Published : 28 Nov 2020 01:41 PM
Last Updated : 28 Nov 2020 01:41 PM

பவன் கல்யாண் குறித்த பிரகாஷ்ராஜின் கருத்துக்கு நாக பாபு பதிலடி

ஹைதராபாத்

பவன் கல்யாண் குறித்த பிரகாஷ்ராஜின் விமர்சனத்துக்கு, அவருடைய சகோதரர் நாக பாபு பதிலடிக் கொடுத்துள்ளார்.

திரையுலகிலிருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார் பவன் கல்யாண். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவருடைய ஜனசேனா கட்சி படுதோல்வியைத் தழுவியது. தற்போது அரசியல் - சினிமா இரண்டிலுமே கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் பவன் கல்யாண்.

அவருடைய ஜனசேனா கட்சி, பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, பாஜகவை தொடர்ச்சியாக விமர்சித்து வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். பவன் கல்யாணின் பாஜக ஆதரவு நிலைப்பாட்டையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

பவன் கல்யாண் குறித்து பிரகாஷ்ராஜ் கூறிய கருத்துகள் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. தற்போது பிரகாஷ்ராஜின் கருத்துக்கு பதிலடிக் கொடுத்துள்ளார் பவன் கல்யாணின் சகோதரர் நாக பாபு. இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"அரசியலில் முடிவுகள் பல முறை மாறும். அதன் நோக்கமே பல நாட்களுக்கு மக்களுக்குச் சேவை செய்வதும், கட்சியின் நலன் காப்பதுமே ஆகும். ஜிஹெச்எம்சி தேர்தலில் எங்கள் தலைவர் பவன் கல்யாண் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு ஒரு பெரிய காரணம் இருக்கும் என நம்புகிறேன். பிரகாஷ்ராஜின் அரசியல் அறிவை பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி புரிந்துகொண்டு விட்டார். அந்த விவாதத்தில் பிரகாஷ் ராஜின் நாக்கு கட்டுண்டதைப் போல இருந்தது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. உங்கள் பார்வையில் பாஜகவின் முடிவுகள் சரியில்லை என்றால் அதை விமர்சிப்பது சரியே.

ஆனால் நல்ல விஷயங்களைப் பாராட்டக்கூடாது என்கிற உங்கள் நோக்கத்தைப் பற்றி என்ன சொல்ல? ஜனசேனா கட்சியுடன் இந்த மாநிலத்தை வளர்ச்சி பெறச் செய்ய பாஜகவால் முடியும். உங்களைப் போன்ற போலி அறிவுஜீவிகள் எவ்வளவு பேர் முயன்றாலும் எங்கள் வெற்றியைத் தடுக்க முடியாது. பாஜக தலைவர்களை நீங்கள் என்ன சொன்னாலும் அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். ஜனநாயகத்துக்கு இந்த கட்சி என்ன மதிப்பு தருகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு சித்திரவதை தந்திருக்கிறீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பணத்துக்காக அவர்களை அல்லல் பட வைத்து, தேதிகள் கொடுத்து அதை ரத்து செய்ததெல்லாம் அனைவருக்கும் தெரியும். முதலில் பவன் கல்யாணைப் பற்றிப் பேசுவதற்கு முன் நாம் இருவரும் பேசுவோம்"

இவ்வாறு பவன் கல்யாண் சகோதரர் நாக பாபு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x