Last Updated : 25 Nov, 2020 12:58 PM

 

Published : 25 Nov 2020 12:58 PM
Last Updated : 25 Nov 2020 12:58 PM

தேசத் துரோக வழக்கு: கங்கணா, ரங்கோலியிடம் ஜனவரி மாதம் விசாரணை

அடுத்த வருடம் ஜனவரி மாதம் மும்பை காவல்துறையின் முன் விசாரணைக்கு ஆஜராவதாக நடிகை கங்கணா ரணவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனால் இவர்களுக்கு எதிரான தேசத்துரோக வழக்கு நடவடிக்கையிலிருந்து மும்பை உயர் நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் அளித்துள்ளது.

வாரிசு அரசியல், போதை மருந்து பழக்கம், மத ரீதியான பாரபட்சம் ஆகிய குற்றச்சாட்டுகளை முன் வைத்து நடிகை கங்கணாவும் அவரது சகோதரியும் பாலிவுட் துறையைச் சேர்ந்தவர்களைத் தவறாக சித்தரிப்பதாகவும், பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த கலைஞர்களிடையே பிரிவினையைத் தூண்டி, அவரவர் மதங்களை அவமதிப்பதாகவும் பாலிவுட்டைச் சேர்ந்த சையத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இவர் பாலிவுட்டில் உடற்பயிற்சி நிபுணராகவும், நடிகர் தேர்வு இயக்குநராகவும் இருக்கிறார்.

மேலும், "முல்லாக்களையும், மதச்சார்ப்பற்ற ஊடகங்களையும் ஒரு வரிசையில் நிற்க வைத்து அனைவரையும் சுட்டுத் தள்ளுங்கள். வரலாறு நம்மை நாஜிக்கள் என்று அழைத்தாலும் பரவாயில்லை" என்று ரங்கோலி கூறிய கருத்தை முன் வைத்து, இந்து - முஸ்லிம் பிரிவினையைத் தூண்டுவதாகவும் சையத் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இதனால் சகோதரிகள் இருவர் மீதும் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் மூன்று முறை விசாரணைக்கு அழைத்தும் பல்வேறு காரணங்களை சுட்டிக் காட்டி இருவரும் விசாரணைக்கு வரவில்லை. இந்தப் புகாரின் பேரில் காவல்துறை பதிவு செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கங்கணா தரப்பிலிருந்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதில், கங்கணாவின் வழக்கறிஞர் ரிஸ்வான் சித்திக், சகோதரிகள் இருவரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு வருவார்கள் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து இருவருக்கும் எதிரான நடவடிக்கையிலிருந்து இடைக்கால நிவாரணம் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இவர்கள் இருவரும் இந்த விஷயம் குறித்து சமூக வலைதளங்களில் எந்த கருத்தும் பகிரக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x