Published : 23 Nov 2020 03:11 AM
Last Updated : 23 Nov 2020 03:11 AM

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நேற்று நடந்தது. இன்று காலை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நேற்று நடந்தது. இதில், தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தேனப்பன் எந்த அணியையும் சாராமல் தனியாக போட்டியிட்டார்.

துணைத் தலைவர் பதவிக்கு கதிரேசன், மதியழகன், முருகன், பி.டி.செல்வகுமார், சிங்கார வடிவேலன், சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும், செயலாளர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோட்டபாடி ராஜேஷ், டி.மன்னன், ஆர்.ராதாகிருஷ்ணன், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரும் போட்டியிட்டனர்.

பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ்.எஸ், கே.ராஜன், ஜே.சதீஷ்குமார் போட்டியிட்டனர். இதில் சதீஷ்குமார் எந்த அணியையும் சாராமல் தனியாக போட்டியிட்டார். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அனிதா உதீப், அழகன் தமிழ்மணி, பாபு கணேஷ், பெஞ்சமின், சந்திரசேகர், டேவிட் ராஜ், ஏழுமலை, ஆர்.மாதேஷ், மனோபாலா, பிரவீன் காந்த், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட 94 பேர் போட்டியிட்டனர்.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் - முரளி ஆகிய இருவர் அணிகள் இடையே சலசலப்பு, வாக்குவாதம் ஏற்பட்டது. காலையில் வாக்களிக்க வந்த உறுப்பினர்களுக்கு டி.ராஜேந்தர் அணியினர் பணம், தங்கக் காசு பரிசளித்ததாக முரளி அணியினர் குற்றம் சாட்டினர். சில மணி நேர வாக்குவாதத்துக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியது.

மொத்தம் 1,303 உறுப்பினர்களை கொண்ட தயாரிப்பாளர் சங்கத்தில் நேற்று மாலை 4 மணி வரை 1,050 வாக்குகள் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுகின்றன. அப்பணி முடிந்ததும், முடிவுகள் அறிவிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x