Last Updated : 22 Oct, 2015 02:19 PM

 

Published : 22 Oct 2015 02:19 PM
Last Updated : 22 Oct 2015 02:19 PM

சின்னத்திரை நடிகர் சங்கத்திலும் சர்ச்சை: ஓராண்டுக்குள் மீண்டும் தேர்தல்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தற்போதுதான் நடந்து முடிந்துள்ளது. அதற்குள் சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல் டிசம்பர் 13 நடைபெறும் என அறிவித்திருக்கிறார்கள்.

சின்னத்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு என சின்னத்திரை நடிகர்கள் சங்கம் என தனியாக செயல்பட்டு வருகிறது. அச்சங்கத்தின் தலைவராக நடிகை நளினி இருந்து வருகிறார். இச்சங்கத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் தேர்தல் நடைபெற்று உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

தலைவராக இருந்த நளினிக்கு சங்கத்திற்குள் கடும் எதிர்ப்பு நிலவியது. அவர் மீது அதிருப்தியில் இருந்த சங்கத்தின் பொருளாளர் வி.டி.தினகர், துணைத் தலைவர் ராஜ்காந்த், இணை செயலாளர்கள் பாபூஸ், கன்யா பாரதி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அடங்கிய 16 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். அதனைத் தொடர்ந்து தலைவராக இருந்த நளினியும் தனது ஆதரவாளர்களுடன் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் சிற்ப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. தேர்தல் மூலமாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் வரை சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தை நிர்வாகம் செய்ய தனியாக குழு ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. அக்குழுவின் தலைவராக தேவேந்திரன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

சின்னத்திரை நடிகர்கள் சங்கத்துக்கு டிசம்பர் 13ம் தேதி தேர்தல் நடத்துவது என்றும், தேர்தல் அதிகாரிகளாக லியாகத் அலிகான் மற்றும் தம்பிதுரை செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்தல் குறித்து சின்னத்திரை நடிகர்கள் சங்க நிர்வாகிகளிடம் பேசிய போது ”இரண்டு அணிகளாக சங்கம் செயல்பட்டு வந்தது. இதனால் பொதுக்குழுவில் எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்ற முடியாமல் சங்கம் செயல்பட்டு வந்தது. இரண்டு அணிகளுமே போட்டிக்கு என்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டார்கள். இதனால் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது” என்றார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x