Published : 17 Nov 2020 11:36 AM
Last Updated : 17 Nov 2020 11:36 AM

நடிகர் தவசிக்கு நிதியுதவி வழங்கிய சிவகார்த்திகேயன், சூரி

புற்றுநோய் சிகிச்சைக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்த நடிகர் தவசிக்கு நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இருவரும் நிதியுதவி செய்துள்ளனர்.

‘கிழக்குச் சீமையிலே’ திரைப்படத்தில் தொடங்கி, தற்போது ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படம் வரைக்கும் ஏராளமான கிராமத்து, குணச்சித்திர, நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் தவசி.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'கொம்பன்' உள்ளிட்ட படங்களில் இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. தற்போது உணவுக்குழாயில் ஏற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசி, மதுரை சரவணா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

சிகிச்சைக்குப் பணமில்லாமல் தான் திண்டாடுவதாகவும், தனக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. .

புற்றுநோயால் மெலிந்த உடலுடன் அவரது வழக்கமான கம்பீரமான மீசையில்லாமல் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். அவரது தோற்றம் காண்போர் மனதை உறையவைக்கிறது.

தவசியின் சிகிச்சைக்கு சரவணா மருத்துவமனை சார்பில் அதன் உரிமையாளரும், திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏவுமான டாக்டர் சரவணன் தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் உதவி வருகிறார்.

இந்நிலையில் இந்த தகவல் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி ஆகியோரது கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தவசியின் சிகிச்சை செலவுக்காக நடிகர் சூரி முதற்கட்டமாக ரூ. 20,000 ரூபாயை வழங்கியுள்ளார். மேலும் அவருக்கும் அவரை கவனித்துக் கொள்ளும் உதவியாளருக்கும் மூன்று வேளை உணவும் வழங்குவதாக சூரி உறுதியளித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சார்பில் முதற்கட்டமாக ரூ. 25,000 வழங்கியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x