Published : 16 Nov 2020 07:57 PM
Last Updated : 16 Nov 2020 07:57 PM

புற்றுநோய் சிகிச்சைக்குப் பணமில்லாமல் உயிருக்குப் போராடும் நடிகர் தவசி: மனதை உறைய வைக்கும் மெலிந்த தேகம்- நீளுமா திரைத்துறையின் உதவிக்கரம்?

மதுரை 

கம்பீரமான பெரிய மீசையுடனும், வாட்ட சாட்டமான கிராமத்து உடல்வாகுடனும் திரைப்படங்களில் வலம் வந்த நடிகர் தவசியை தமிழகத்தில் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

‘கிழக்குச் சீமையிலே’ திரைப்படத்தில் தொடங்கி, தற்போது நடிகர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படம் வரைக்கும் ஏராளமான கிராமத்து, குணச்சித்திர, நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'கொம்பன்' உள்ளிட்ட படங்கள் இவரைப் பட்டிதொட்டி எங்கும் அடையாளப்படுத்தியது. தற்போது உணவுக்குழாயில் ஏற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசி, மதுரை சரவணா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

புற்றுநோயால் மெலிந்த உடலுடன் அவரது வழக்கமான கம்பீரமான மீசையில்லாமல் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். அவரது தோற்றம் காண்போர் மனதை உறையவைக்கிறது.

அவர், தோன்றும் வீடியோவில் சிகிச்சைக்குப் பணமில்லாமல் திண்டாடுவதாகவும், உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், அவர், ‘‘இத்தனை வருஷ காலமாக எத்தனையோ படங்களில் நடித்துள்ளேன். எனக்கு இப்படி ஒரு வியாதி வரும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. கடவுள் இப்படியொரு வியாதியைக் கொடுத்துவிட்டான்.

வைத்திய செலவுக்கு ரொம்ப சிரமப்படுகிறேன். ஒன்றும் செய்ய முடியவில்லை, இதைப் பார்த்து சக நடிகர்கள் எனக்கு உதவுங்கள்’’ என்று கண்ணீர் மல்கக் கோரியுள்ளார்.

தனியார் மருத்துவமனையில் புற்றுநோயுடன் போராடும் அவருக்கு மதுரையைச் சேர்ந்த நாடகக் கலைஞர்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்துள்ளனர்.

தற்போது தவசியின் சிகிச்சைக்கு சரவணா மருத்துவமனை சார்பில் அதன் உரிமையாளரும், திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏவுமான டாக்டர் சரவணன் தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் உதவி வருகிறார்.

இதுகுறித்து எம்எல்ஏ சரவணன் கூறுகையில், ‘‘தவசிக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் வந்துள்ளது. அதனால், சாப்பிட முடியாமல் அவர் சிரமப்பட்டார்.

தற்போது எண்டோஸ்கோப்பி மூலம் சிகிச்சை அளித்து சாப்பிட வைத்துள்ளோம். அவரது நிலையை உணர்ந்து இலவசமாக எங்கள் மருத்துவமனை சார்பில் சிகிச்சை வழங்கி வருகிறோம்,

இருப்பினும், இவருக்கு யாரேனும் உதவ நினைத்தால் அவரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினால் வறுமையில் இருக்கும் அவரின் குடும்பத்தாருக்கு அது பேருதவியாக இருக்கும்’’ என்றார்.

இதற்கிடையில், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பலரும் தவசியுடன் நடித்த சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களை டேக் செய்து உதவி கோரி வருகின்றனர்.

திரைத்துறையின் உதவிக்கரம் தவசியைக் காப்பாற்ற நீளுமா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x