Published : 12 Nov 2020 04:56 PM
Last Updated : 12 Nov 2020 04:56 PM

'ஒத்த செருப்பு' மறு வெளியீடு; திரையரங்குகள் ஒதுக்கீட்டில் பார்த்திபன் அதிருப்தி

தீபாவளிக்கு 2 படங்கள் மட்டுமே வெளியாவதால், 'ஒத்த செருப்பு' படத்தை மீண்டும் வெளியிட முயற்சி செய்து வருகிறார் பார்த்திபன். இந்நிலையில், திரையரங்குகள் ஒதுக்கீடு தொடர்பாகத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் 'ஒத்த செருப்பு'. கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது தீபாவளிக்கு 2 படங்கள் மட்டுமே வெளியாவதால், 'ஒத்த செருப்பு' படத்தை மீண்டும் வெளியிட முயற்சி செய்து வருகிறார் பார்த்திபன்.

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் பார்த்திபன் கூறியிருப்பதாவது:

"புதுப் படங்கள் வாரா கேப்பில், நம்ம படத்தை வுட்டுப் பார்க்கலாமே எனப் பார்த்தால், அரங்கு கிடைப்பது அரிதாய் இருக்கிறது. அனேக தியேட்டர்களில் விளக்கை அணைத்துவிட்டு முரட்டுக் குத்து குத்துகிறார்கள். (யதார்த்தம் புரியாமல் புலம்பலும் அலம்பலும் சலம்பலும் வேறு) மீறிக் கிடைக்கும் ஒரு ஸ்கிரீனில் நாளை/நாளை மறுநாள் ஒத்த ‘சிறப்பு’! பாருங்கள் - சர்வ பாதுகாப்புடன். அரைகுறை ஆரோக்கியத்துடன் அரங்கு வரவேண்டாம். என் ஜான் உடம்பை மீறி என்ன என்ஜாய்மென்ட்?"

இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

'ஒத்த செருப்பு' படத்தைத் தொடர்ந்து, ஒரே ஷாட்டில் மொத்தப் படத்தையும் எடுப்பதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் பார்த்திபன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x