அமிதாப் பச்சன் படத் தயாரிப்பாளர்கள் மீது வழக்குத் தொடர்ந்த தெலுங்கு இயக்குநர் 

அமிதாப் பச்சன் படத் தயாரிப்பாளர்கள் மீது வழக்குத் தொடர்ந்த தெலுங்கு இயக்குநர் 

Published on

ஹைதரபாத்தைச் சேர்ந்த நந்தி சின்னி குமார் என்ற இயக்குநர் ‘ஜூன்ட்’ படக்குழுவினர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

‘ஃபேண்ட்ரி’, ‘சாய்ராத்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய நாகராஜ் மஞ்சுளே இயக்கியுள்ள ‘ஜூன்ட்’ படத்தில் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார். குப்பத்து இளைஞர்களின் கால்பந்து பயிற்சியாளராக விளங்கிய விஜய் பார்ஸே என்பவரின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவரும் இப்படத்தின் டீஸர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இக்கதையில் முக்கியக் கதாபாத்திரமாக வருபவர் அகிலேஷ் பால். இவரது கதையைத் தவிர்த்து இப்படத்தை எடுப்பது கடினம். இந்நிலையில் அகிலேஷ் பால் குறித்த கதையின் உரிமையைத் தான் ஏற்கெனவே வாங்கிவிட்டதாகக் கூறி ஹைதராபாத்தைச் சேர்ந்த இயக்குநரான நந்தி சின்னி குமார், ‘ஜூன்ட்’ தயாரிப்பாளர்கள் மீது கடந்த மே மாதம் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கைத் தெலங்கானா உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்நிலையில் ‘ஜூன்ட்’ படத்தை ஓடிடியில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இதனால் நீதிமன்றத்தை மதிக்காமல் படத்தை ஓடிடியில் வெளியிடத் திட்டமிடுவதாகக் கூறி ‘ஜூன்ட்’ படக்குழுவினர் மீது நந்தி சின்னி குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

‘ஜூன்ட்’ திரைப்படத்தின் உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியுள்ளது. விரைவில் அப்படத்தை வெளியிடவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால், தற்போது மீண்டும் ஒரு புதிய வழக்கு படக்குழுவினர் மீது போடப்பட்டுள்ளதால் இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in