Published : 01 Nov 2020 01:15 PM
Last Updated : 01 Nov 2020 01:15 PM

கரோனா அச்சுறுத்தல்: ஷாரூக் பிறந்தநாளை ஆன்லைனில் கொண்டாடும் ரசிகர்கள் 

பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் ஷாரூக் கான். 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம்வெளியான ‘ஜீரோ’படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் தோல்வியைத் தழுவியது. இதற்குப் பிறகு 'லயன் கிங்' படத்தின் இந்தி டப்பிங்கில், தனது மகனுடன் இணைந்து குரல் கொடுத்ததைத் தாண்டி வேறு எந்த புதிய படத்திலும் ஷாரூக் கான் நடிக்கவில்லை.

இந்த சூழலில் யாஷ்ராஜ் நிறுவனம் தயாரிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கவுள்ள புதிய படத்தில் ஜான் ஆபிரஹாமுடன் ஷாரூக்கான் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தைக் குறைந்த நாட்களில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் ஷாரூக் கான். அவரது ரெட் சில்லீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. தற்போது இந்தப் படத்துக்கு 'சங்கி' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தமாகியுள்ளார்.

வரும் நவம்பர் 2ஆம் தேதி அன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஷாரூக் கான். அவரது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் தனது வீட்டின் முன்பு ரசிகர்களை சந்திப்பது ஷாரூக் கானின் வழக்கம். அவரை காண பெரும் திரளான ரசிகர் கூட்டம் அவரது வீட்டு முன்பு கூடும்.

ஆனால் இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக தனது ரசிகர்கள் தன்னை சந்திக்க வரவேண்டாம் என்று ஷாரூக் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை கருத்தில் கொண்டு அவரது ரசிகர்கள் ஆன்லைன் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அந்த நிகழ்வில் நேரலையில் ஷாரூக்கை சந்திப்பது, ரசிகர்களுக்கான ஆன்லைன் விளையாட்டுகள், கேள்வி பதில் உள்ளிட்டவை இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் சானிடைசர், முகக் கவசங்கள், கரோனா கிட்கள் உள்ளிட்டவற்றை இலவசமாக விநியோகம் செய்யவும் அவரது ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x