Published : 28 Oct 2020 05:54 PM
Last Updated : 28 Oct 2020 05:54 PM

நவ.9-ம் தேதி 'துப்பறிவாளன் 2' படப்பிடிப்பு தொடக்கம்

'துப்பறிவாளன் 2' படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 9-ம் தேதி தொடங்கவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'துப்பறிவாளன் 2'. விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்க லண்டனில் படப்பிடிப்பு தொடங்கியது. அதன் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியவுடன் மிஷ்கின் - விஷால் இருவருக்கும் மோதல் வெடித்தது.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் பொறுப்பிலிருந்து மிஷ்கின் விலகினார். அதனால் விஷால் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்ற பிறகு 'துப்பறிவாளன் 2' படப்பிடிப்பு தொடங்கவில்லை. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியிட்டார்கள்.

தற்போது 'சக்ரா' படத்தை முடித்துவிட்டு, ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை விஷால் முடிக்கவுள்ளார். இதனால் 'துப்பறிவாளன் 2' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்று திட்டமிட்டுள்ளார்.

நவம்பர் 9-ம் தேதி முதல் விஷால் இயக்கத்தில் 'துப்பறிவாளன் 2' உருவாகவுள்ளது. இதில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான காட்சிகளும் இருக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இதில் அஷ்யா, ரகுமான், கெளதமி, பிரசன்னா உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடிக்கவுள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.

நாயகனாக நடிப்பதற்கு முன்னதாக அர்ஜுனிடம் உதவி இயக்குநராக விஷால் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x