Last Updated : 28 Oct, 2020 11:35 AM

 

Published : 28 Oct 2020 11:35 AM
Last Updated : 28 Oct 2020 11:35 AM

"அநீதிக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு கொடுங்கள்" - தேசிய மகளிர் ஆணையம், கங்கணாவுக்கு மால்வி மல்ஹோத்ரா கோரிக்கை

திருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்த காரணத்தால் மஹிபால் சிங் என்பவரால் கத்தியால் குத்தப்பட்ட நடிகை மால்வி மல்ஹோத்ரா, தேசிய மகளிர்ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, நடிகை கங்கணா ரணாவத் ஆகியோரின் ஆதரவைக் கோரியுள்ளார். மும்பை நகரத்தில் இப்படியொரு சம்பவம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று மால்வி கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் மூலம் மஹிபாலும் மால்வியும் நண்பர்களாகியுள்ளனர். தன்னை ஒரு தயாரிப்பாளர் என்றும், ஒரு பாடல் வீடியோ ஆல்பத்துக்காக நடிக்க வேண்டும் என்றும் மஹிபால் மால்வியிடம் கேட்டுள்ளார். பின் சில முறை அவரைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் கோரியுள்ளார். ஆனால் மஹிபாலின் கோரிக்கையை மால்வி மறுத்துள்ளார். தொடர்ந்து வற்புறுத்தவே, சமூக ஊடகத்தில் மஹிபாலுடனான நட்பை முறித்து விலகியுள்ளார்.,

மும்பை வெர்ஸோவா பகுதியில் ஒரு காஃபி ஷாப்புக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த மால்வியை தனது ஆடம்பரக் காரில் வந்த மஹிபால் வழிமறித்துள்ளார். தன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி நேரிலும் வற்புறுத்த, மால்வி மறுத்துள்ளார். இதனால் கோபம் கொண்ட மஹிபால் கத்தியால் மால்வியை மூன்று முறை பலமாகக் குத்திவிட்டு தன் காரில் தப்பித்துச் சென்றுள்ளார்.

தற்போது கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மால்வி, "தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரான ரேகா சர்மா இந்த விஷயத்தில் தலையிட்டு எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோருகிறேன். நானும் மாண்டி, இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவள் என்பதால் கங்கணா ரணாவத்தும் எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகிறேன்.

மும்பை நகரில் எனக்கு நடந்த இந்தச் சம்பவத்தை நான் என் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. எனவே அநீதிக்கு எதிரான எனது போராட்டத்தில் இவர்களின் ஆதரவு வேண்டும்" என்று பேசியுள்ளார்.

மால்வியின் இரண்டு கைகளிலும், வயிற்றிலும் காயம்பட்டுள்ளது. ஆனால், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை நடைபெறவுள்ளது. மால்வியின் உள்ளூர் பொறுப்பாளர் அதுல் படேல், காவல்துறை தங்களுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும், குற்றவாளி மஹிபாலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மஹிபால் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x