Published : 26 Oct 2020 06:41 PM
Last Updated : 26 Oct 2020 06:41 PM

சூர்யாவின் அடுத்தடுத்த மூன்று படங்கள்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

சென்னை

சூர்யாவின் அடுத்தடுத்த மூன்று படங்கள் குறித்தும், அதன் இயக்குநர்கள் குறித்தும் தெரியவந்ததின் மூலம் அவரது படங்களின் வரிசையில் நிலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' படத்தின் ட்ரெய்லர் இன்று (அக்டோபர் 26) வெளியிடப்பட்டுள்ளது. இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நவம்பர் 12-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் 'சூரரைப் போற்று' படம் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. சில மாதங்களுக்கு முன்பு சூர்யா நடிப்பில் உருவாகும் 40-வது படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. 'வாடிவாசல்' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தை தாணு தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிடப்பட்டது.

இதனிடையே, நேற்று (அக்டோபர் 25) சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்க தாங்கள் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் குழப்பம் ஏற்பட்டது.

இது தொடர்பாக விசாரித்தபோது, சூர்யா சென்னை திரும்பியவுடன் முதலில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். அந்தப் படத்தை முடித்துவிட்டு சன் பிக்சர்ஸ் - பாண்டிராஜ் கூட்டணி படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். அதனை முடித்துவிட்டுதான் 'வாடிவாசல்' பணிகளைத் தொடங்கவுள்ளார் என்று தெரிவித்தார்கள்.

ஏனென்றால், 'வாடிவாசல்' படத்துக்கு முன்பாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை வெற்றிமாறன் முடிக்க வேண்டும். இன்னும் அதன் படப்பிடிப்பே தொடங்கவில்லை. அதை முடித்துவிட்டுதான் 'வாடிவாசல்' படத்துக்கான முதற்கட்டப் பணிகளையே கவனிக்கவுள்ளார் வெற்றிமாறன்.

தற்போதுள்ள சூழல்படி 'வாடிவாசல்' படத்தின் பணிகள் தொடங்குவதற்கே அடுத்தாண்டு ஏப்ரல் ஆகும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x