Published : 22 Oct 2020 11:20 AM
Last Updated : 22 Oct 2020 11:20 AM

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா நடிக்கும் புதிய படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜீவா. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி சௌத்ரியின் மகனான இவர் தனது தந்தையின் தயாரிப்பில் வெளியான ‘ஆசை ஆசையாய்’ படத்தின் மூலம் முதன்முதலில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் நடித்த ‘ராம்’, ‘சிவா மனசுல சக்தி’, ‘கோ’ உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

2011ஆம் ஆண்டு வெளியான ரௌத்திரம் திரைப்படத்துக்கு பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் எந்தவொரு படத்தில் நடிக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு தனது தந்தையின் நிறுவனமான சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படமொன்றில் நடிக்க ஜீவா ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர் சசியிடம் உதவியாளராக பணியாற்றிய சந்தோஷ் ராஜன் இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.

இப்படத்தில் ஜீவாவுடன் காஷ்மீரா பர்தேஷி, ப்ரயாகா நாக்ரா, விடிவி கணேஷ், சித்திக், ஷா ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படம் குறித்து இயக்குநர் சந்தோஷ் ராஜன் கூறியதாவது:

இயக்குநர் சசியின் ‘டிஷ்யூம்’ படத்தில் உதவியாளராக பணிபுரிந்த போது படப்பிடிப்பில் நடிகர் ஜீவாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இயல்பிலேயே மிகவும் எளிமையான, கலகலப்பான மனிதர். சுற்றியுள்ளவர்களை தன் கலகலப்பான குணத்தால் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். எனது கதையையும் அப்படியானதொரு கதாப்பாத்திரத்தை கொண்டிருப்பதால் அவரை அணுகினேன். இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு, எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் ஆசிர்வாதம். மேலும் இப்படம் தரப்போகும் மிகச்சிறந்த அனுபவங்களுக்காக காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் 91 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x