Last Updated : 21 Oct, 2020 05:41 PM

 

Published : 21 Oct 2020 05:41 PM
Last Updated : 21 Oct 2020 05:41 PM

’மண்ணடி பின்னாடி’, ‘அதே அதே’, ‘ஜம்புலிங்கமே ஜடாதரா’; காமெடி நடிகருக்கு கட் அவுட்! - தேங்காய் சீனிவாசன் பிறந்தநாள் ஸ்பெஷல்

மெட்ராஸ் பாஷை பேசி நடித்தவர்கள் ஏராளம். ஆனால், அச்சுப்பிசகாமல், அப்படியே சென்னை பாஷையை பொளந்துகட்டிய நடிகர்கள் லூஸ் மோகன், கமல்ஹாசன் என்று பலர் உண்டு. அவர்களில் அறுபதுகளின் மத்தியில் சென்னை பாஷையில் கலக்கியெடுத்து காமெடி பண்ணியவர்... தேங்காய் சீனிவாசன். வார்த்தைகளுக்குள் அழுத்தம் கொடுப்பது, புதிதுபுதிதாக வார்த்தைகளை வித்தியாசமான ஏற்ற இறக்கங்களுடன் சொல்வது என்பதெல்லாம் தேங்காய் சீனிவாசனின் தனி ஸ்பெஷல்.
என்.எஸ்.கே., டணால் தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், ஏ.கருணாநிதி வரிசையில் தனக்கென பாணியையும் தனக்கென்று ஓரிடத்தையும் பிடித்த தேங்காய் சீனிவாசன், எந்தக் கேரக்டராக இருந்தாலும் வெளுத்து வாங்கிவிடுவார்.

அன்றைய திருநெல்வேலி ஜில்லாவில், இன்றைய தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் தான் சீனிவாசனுக்கு பூர்வீகம். சிறுவயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம். அவரின் அப்பாவைப் போலவே நாடகத்துறைக்குள் நுழைந்தார் சீனிவாசன். அப்பாவின் ‘கலாட்டா கல்யாணம்’ நாடகத்தில் மேடையேறினார். முதல் நாடகத்திலேயே நல்ல பெயர் வாங்கினார்.

இதன் பின்னர் தொடர்ந்து நடிப்பதே தொழில் என இறங்கினார். அப்பா டிராமா மட்டுமின்றி பலர் எழுதிய நாடகங்களிலும் நடித்தார். ‘கல் மணம்’ என்ற நாடகத்தில் இவரின் நடிப்பு ஏகத்துக்கும் பாராட்டப்பட்டது.தேங்காய் வியாபாரியாக நடிப்பில் பொளந்து கட்டிய சீனிவாசனுக்கு கரவொலி கிடைத்துக்கொண்டே இருந்தது. நாடகத்துக்குத் தலைமை ஏற்க வந்திருந்த பிரபலம், மேடையில் சீனிவாசனை அழைத்துப் பாராட்டினார். ‘தேங்காய் வியாபாரியாக மிகச்சிறப்பாக நடித்தார் இந்தப்பையன். இவர், இனிமேல் வெறும் சீனிவாசன் இல்லை. தேங்காய் சீனிவாசன் என்று எல்லோரும் அழைக்கவேண்டும்’ என்றார். அன்று முதல், சீனிவாசன், தேங்காய் சீனிவாசனானார். ‘தேங்காய்’ பட்டத்தை பெயருக்கு முன்னே கொடுத்தவர்... ‘டணால்’ தங்கவேலு.

நடிகர் ஒருவிரல் கிருஷ்ணாராவுக்கு ஏன் ஒருவிரல் எனும் அடைமொழி என்பது தெரியும்தானே. ‘ஒருவிரல்’ எனும் திரைப்படத்தில் கிருஷ்ணாராவ் அறிமுகமானார். அதனால் படத்தின் பெயரும் அவர் பெயரில் ஒட்டிக்கொண்டது. 1965ம் ஆண்டு வெளியான ‘ஒருவிரல்’ படம், கிருஷ்ணாராவுக்கு மட்டும் முதல் படம் அல்ல. தேங்காய் சீனிவாசனுக்கும்தான் முதல்படம். ஒருவேளை, தேங்காய் எனும் அடைமொழி இல்லாது போயிருந்தால், ‘ஒருவிரல்’ தேங்காய் சீனிவாசன் என்று அழைக்கப்பட்டிருப்பாரோ என்னவோ?

68ம் ஆண்டு, பாலசந்தரின் ‘எதிர்நீச்சல்’ படத்தின் நாயகன் நாகேஷ். படத்தில் சிறியதொரு கேரக்டரில் நடித்தார் தேங்காய் சீனிவாசன். பொருட்களைத் திருடிவிட்டு, அதை நாகேஷ் மீது பழி போடுகிற கதாபாத்திரம். அருமையாகச் செய்திருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில், குறிப்பாக ‘சி.ஐ.டி.சங்கர்’ படத்தில், ஜெய்சங்கரின் நண்பராக, திக்கிப் பேசுகிறவராக, பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

வரிசையாகப் படங்கள் கிடைக்கத் தொடங்கின. மெட்ராஸ் பாஷை பேசுபவராக, பிராமண பாஷை பேசுபவராக, எம்ஜிஆருடன் இருப்பவராக, சிவாஜிக்கு நண்பராக, ஜெய்சங்கரின் தோஸ்த்தாக நடித்து வந்தார்.

ஏவி.எம்மின் ‘காசேதான் கடவுளடா’ திரைப்படத்தில் முத்துராமன், ஸ்ரீகாந்த், சசிக்குமார் என பலரும் நடித்தார்கள். ஆனாலும் அவர்களையெல்லாம் ஓவர்டேக் செய்து நடிப்பில் முதலிடம் பிடித்தார் தேங்காய் சீனிவாசன். டீக்கடைக்காரராகவும் போலிச்சாமியாராகவும் அசத்தினார். ‘அதே அதே’ என்று சொல்லும்போதெல்லாம் தியேட்டரே குலுங்கியது. ஒரு படத்தின் ஹீரோவுக்கு வைக்காமல், காமெடியனுக்கு கட் அவுட் வைத்தது இந்தப் படத்துக்காகத்தான் இருக்கும். தேங்காய் சீனிவாசனுக்குத்தான் இருக்கும். அந்த அளவுக்கு சாமியார் கதாபாத்திரத்தில், சடுகுடு விளையாடியிருப்பார்.

எழுபதுகளிலும் இவரின் நடிப்பு, பட்டையைக் கிளப்பியது. ‘கல்யாண ராமன்’ படத்தில் போலி ராமன் கமலாக வந்து மனைவி மனோரமாவை, அம்மா என்று பொய் சொல்லி நடிக்கும் கேரக்டரில் பிரமாதம் பண்ணியிருப்பார். ‘பில்லா’ படத்தில், கொள்ளைக்கூட்டத்தில் இருந்து விட்டு, திருந்தி வாழ்பவராக, காலில் அடிபட்டு விந்திவிந்தி நடப்பவராக அசத்தியிருப்பார். இளையராஜாவின் முதல் படமான ‘அன்னக்கிளி’ படத்தில் வில்லத்தனம் பண்ணிக்கொண்டிருந்த ஸ்ரீகாந்த் நல்லவராகவும் காமெடியும் குணச்சித்திரமுமாக நடித்த தேங்காய் சீனிவாசன் வில்லத்தனம் பண்ணுபவராகவும் நடித்திருந்தார்கள்.

விஜயகுமார், சுஜாதா நடித்த ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தில், பிளாக் மெயில் செய்யும் கேரக்டரில் நம் கோபத்தைக் கிளறிவிட்டிருப்பார் தேங்காய் சீனிவாசன். கமலின் ‘டிக் டிக் டிக்’ படத்தில், கமலை உசுப்பிவிட்டு தப்பு செய்யத் தூண்டும் முதலாளியாகவும் ‘ப்ரியா’ படத்தில் ‘உன் பாஸ்போர்ட் என் கையில’ என்று சொல்லும் இயக்குநராகவும் சிவாஜியின் ‘தியாகம்’, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ‘அடுக்குமல்லி’, ‘அதிர்ஷ்டம் அழைக்கிறது’, ‘அன்பே சங்கீதா’ என்று பல படங்களில் பல விதமான கதாபாத்திரங்கள் செய்து அசத்தினார்.

கே.பாலசந்தரின் ‘தில்லுமுல்லு’ முதலாளி ராமச்சந்திர மூர்த்தி கதாபாத்திரம், வேறு எவரையுமே கற்பனை செய்ய முடியாத கேரக்டர். படத்தில் மிடுக்கான பாடி லாங்வேஜ், முதலாளி, பணக்காரர் என்ற கெத்துக் காட்டி, அச்சுப்பிச்சு பேச்சு ஏதுமில்லாமல், கோட்டும் சூட்டுமாகப் போட்டுக்கொண்டு ஏமாந்துகொண்டே இருக்கிற அந்தக் கேரக்டரை, தேங்காய் சீனிவாசனைத் தவிர வேறு எவரும் இத்தனை ஸ்பெஷலாகப் பண்ணவே முடியாது.

நன்றாக டயலாக் பேசிக்கொண்டே இருப்பார். தடக்கென்று ஒரு வார்த்தையை நீட்டி முழக்கி, புதிதாக ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டு, ‘ஹா...’ என்று சிவாஜி ஸ்டைலில் முடிப்பார். சோகக் காட்சிகள் என்றால் சிவாஜியின் பாதிப்பு நிச்சயம் இருக்கும். ‘கிருஷ்ணன் வந்தான்’ படத்தை தயாரித்தார்.

நெடுநெடு உயரத்துடன், அழகிய கிராப்பும் முகவெட்டும் கொண்ட காமெடியன் தேங்காய் சீனிவாசனாகத்தான் இருக்கும் என்று தேங்காய் சீனிவாசனின் அழகை அப்போது ரொம்பவே சிலாகித்து விமர்சித்தார்கள். நாயகனாக, காமெடியாக, வில்லனாக, கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக என பலதரப்பட்ட பாத்திரங்களில் நடித்த தேங்காய் சீனிவாசன், 1937ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி பிறந்தார்.

இன்று தேங்காய் சீனிவாசனின் பிறந்தநாள். 83வது பிறந்தநாள்.

காமெடிக் கலைஞனை, மகத்தான கலைஞனை, தேங்காய் சீனிவாசனைக் கொண்டாடுவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x