Published : 20 Oct 2020 02:44 PM
Last Updated : 20 Oct 2020 02:44 PM

பிரித்விராஜுக்கு கரோனா தொற்று

கொச்சி

பிரித்விராஜுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

கரோனா ஊரடங்கு தொடங்கிய போது, 'ஆடுஜீவிதம்' படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் சிக்கிக் கொண்டார் பிரித்விராஜ். பல நாட்கள் போராட்டத்துக்குப் பிறகே ஒட்டுமொத்தப் படக்குழுவினருடன் இந்தியா திரும்பினார்.

பின்பு, கேரளாவில் கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். சில தினங்களுக்கு முன்புதான் 'ஜன கண மன' படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போது அனைத்துப் படக்குழுவினருக்கும் கரோனா பரிசோதனை செய்தார்கள்.

தற்போது படப்பிடிப்பு முடிவடையும்போது கரோனா பரிசோதனை செய்துள்ளனர். அப்போது பிரித்விராஜுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இது தொடர்பாக பிரித்விராஜ் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"திஜோ ஜோஸ் ஆண்டனியின் 'ஜன கண மன' படப்பிடிப்பில் அக்டோபர் 7-ம் தேதியிலிருந்து பணியாற்றி வருகிறேன். கோவிட் தொற்றைத் தடுக்க அதற்கான விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்றினோம். பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தோம்.

விதிமுறைகளுக்கு ஏற்ப படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னாலும், கடைசி நாள் படப்பிடிப்புக்குப் பிறகும் அனைவருக்கும் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. துரதிர்ஷ்டவசமாகக் கடைசியாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் எனக்குத் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. நான் தனிமையில் இருக்கிறேன். எனக்குக் கரோனா அறிகுறிகள் இல்லை. நலமாக இருக்கிறேன்.

என்னுடன் தொடர்பிலிருப்பவர்கள் அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறேன்.

விரைவில் குணமாகி வேலைக்குத் திரும்புவேன் என நம்புகிறேன். அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி".

இவ்வாறு பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x