Published : 20 Oct 2020 01:22 PM
Last Updated : 20 Oct 2020 01:22 PM

கேங்ஸ்டர் பின்னணியில் பாபி சிம்ஹாவின் புதிய படம்

கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகும் புதிய படத்தில் பாபி சிம்ஹா நாயகனாக நடிக்கவுள்ளார்.

சிறிய கதாபாத்திரங்களில் நடித்து, பின்பு நாயகனாக வளர்ந்தவர் பாபி சிம்ஹா. தற்போது தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் கூட நல்ல கதைகளில் நடித்து வருகிறார். தற்போது 'புத்தம் புதுக் காலை' ஆந்தாலஜியில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள 'மிராக்கிள்' குறும்படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது, ஒரு படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பாபி சிம்ஹா. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர் இயக்கவுள்ளார். இவர் பல்வேறு விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார்.

'அவள் அப்படித்தான்', 'பன்னீர் புஷ்பங்கள்', 'கடலோரக் கவிதைகள்', 'சீவலப்பேரி பாண்டி' உள்ளிட்ட பல படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் கே.ராஜேஷ்வர். அதுமட்டுமல்லாமல், 'அமரன்', உள்ளிட்ட பல படங்களை கே.ராஜேஷ்வர் இயக்கியுள்ளார்.

தற்போது மகன் விக்ரம் ராஜேஷ்வர் இயக்கும் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனத்தை ராஜேஷ்வர் எழுதியுள்ளார். முழுக்க கேங்ஸ்டர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

2021-ம் ஆண்டு தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. விரைவில் பாபி சிம்ஹாவுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x