Published : 19 Oct 2020 02:02 PM
Last Updated : 19 Oct 2020 02:02 PM

சினிமா இல்லாமல் வாழ முடியாது; செத்துப் போய்விடுவோம்: இயக்குநர் மிஷ்கின்

சென்னை

சினிமா இல்லாமல் வாழ முடியாது. செத்துப் போய்விடுவோம் என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பேய் மாமா'. ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் நாயகனாக யோகி பாபு நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (அக்டோபர் 18) நடைபெற்றது.

இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 'பேய் மாமா' படத்தின் இசையை வெளியிட்டார். இந்த விழாவில் இயக்குநர் மிஷ்கின், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, மனோபாலா, அம்ரீஷ், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

'பேய் மாமா' விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது:

"16 வருடங்களுக்கு முன்பு ஒரு படிக்கட்டு ஏறி ஒரு இசை அமைப்பாளரைச் சந்திக்கும் முன் நான் சந்தித்த பெரிய இயக்குநர் ஷக்தி சிதம்பரம் சார். எங்கு பார்த்தாலும் அன்போடு பேசக்கூடியவர். இன்றைய நாளில் ஒரு புதுப்பட இயக்குநர் போல ஓடிக்கொண்டிருக்கிறார். எனக்கு காமெடிப் படம் ரொம்பப் பிடிக்கும்.

'பேய் மாமா' படத்தைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இப்படியொரு படம் எடுக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. யோகி பாபுவை நான் இதுவரை நேரில் சந்தித்தது இல்லை. அந்தத் தம்பியிடம் எப்படிப் பேசுவது என்று சிந்திக்கும் போது, அந்தத் தம்பி என்கிட்ட நேரே வந்து "சார் நான் உங்க ரசிகன் சார்" என்றார்.

இந்த எளிமை வாழ்நாள் முழுவதும் அவரை நன்றாக இருக்க வைக்கும். இந்த 7 மாதங்களாக நாம் எல்லாருமே பேயாகத்தான் இருந்தோம். இப்போதுதான் மனிதர்களாக உலாவுகிறோம். அதற்கான காரணமாக இந்த விழாவும் படமும் அமைந்துள்ளது. அதனாலேயே இந்தப் படமும் பெரிய வெற்றிபெற வேண்டும். சாப்பாடு இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம். ஆனால், சினிமா இல்லாமல் வாழ முடியாது. செத்துப் போய்விடுவோம்".

இவ்வாறு இயக்குநர் மிஷ்கின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x