ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்தியரான பானு அதையா மறைவு - பிரபலங்கள் இரங்கல்

ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்தியரான பானு அதையா மறைவு - பிரபலங்கள் இரங்கல்
Updated on
1 min read

ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்தியரான பானு அதையா மரணமடைந்தார். அவருக்கு வயது 91.

1982ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கத்தில் வெளியான படம் ‘காந்தி’. மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் காந்தியாக பிரபல ஹாலிவுட் நடிகர் பென் கிங்ஸ்லி நடித்திருந்தார். இப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பிரிவுகளுக்காக 8 ஆஸ்கர் விருதுகளை வென்றது. இந்த படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய பானு அதையாவுக்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. வரலாற்றிலேயே முதன்முறையாக ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்தியர் இவரே.

இது தவிர உலகம் முழுவதும் 100க்கும் படங்களில் பானு அதையா பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் 91 வயதான பானு அதையா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (15.10.2020) மும்பையிலுள்ள தனது வீட்டில் காலமானார். இந்த தகவலை அவரது மகள் ராதிகா குப்தா உறுதி செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

நேற்று அதிகாலை அவர் மரணமடைந்தார். 8 ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு மூளையில் கட்டி ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது. 3 ஆண்டுகளாக அவரது உடலின் ஒரு பகுதி செயலிழந்ததால் படுக்கையில் இருந்து வந்தார்.

இவ்வாறு ராதிகா குப்தா கூறியுள்ளார்.

1956ஆம் ஆண்டு குரு தத் நடிப்பில் வெளியான ‘சிஐடி’ படத்தின் மூலம் தனது திரையுலகப் பயணத்தை பானு தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பானு அதையா மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in