Last Updated : 15 Oct, 2020 01:42 PM

 

Published : 15 Oct 2020 01:42 PM
Last Updated : 15 Oct 2020 01:42 PM

மீண்டும் வெளியாகும் 'கேதர்நாத்': சுஷாந்தின் மரணத்தை வைத்துப் பணம் சம்பாதிப்பதாக ரசிகர்கள் வருத்தம்

மும்பை

மறைந்த நடிகர் சுஷாந்த் நடித்த 'கேதர்நாத்' திரைப்படம் திரையரங்கில் மீண்டும் வெளியாவது குறித்து ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

பல மாதங்கள் ஊரடங்கைத் தொடர்ந்து இன்று (அக்டோபர் 15) இந்தியாவின் பல மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன. புதிதாக எந்தப் படங்களும் வெளியாகத் தயாராக இல்லாத நிலையில் பழைய திரைப்படங்களை வெளியிடப் பலர் திட்டமிட்டுள்ளனர்.

'தப்பாட்', 'தன்ஹாஜி', 'ஷுப் மங்கள் ஸ்யாதா சாவ்தான்' உள்ளிட்ட பிரபலமான படங்களோடு சேர்த்து மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த 'கேதர்நாத்' திரைப்படமும் வெளியாகிறது. இதுகுறித்து ஒரு தரப்பினர் மகிழ்ச்சி தெரிவித்தாலும், இன்னொரு பக்கம் இது சுஷாந்தின் மரணத்தை வைத்து லாபம் சம்பாதிக்கும் முயற்சி என்று விமர்சித்து வருகின்றனர்.

பேராசை பிடித்த சிலர் சுஷாந்தின் பெயரை வைத்து இன்னும் பணம் சம்பாதிக்க நினைக்கின்றனர். நல்ல உத்தி. ஆனால், ரசிகர்கள் முட்டாள்கள் இல்லை. சுஷாந்த் உயிரோடு இருந்தபோதே கேதர்நாத்துக்கு போதிய திரைகளைத் தராமல் இப்போது வெளியிட்டு என்ன பயன்? இதனால் யாருக்கு லாபம்? சுஷாந்த் எப்படி இறந்திருந்தாலும் பாலிவுட் அவருக்குச் செய்தது நியாயமல்ல என்கிற ரீதியில் நெட்டிசன்கள் பலர் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும், படத்தின் இயக்குநரும் இணை தயாரிப்பாளருமான அபிஷேக் கபூரைக் கண்டித்தும், சுஷாந்த் ரசிகர்கள் யாரும் திரையரங்குக்குப் போக வேண்டாம் என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் சைஃப் அலி கானின் மகளான சாரா அலி கான் நாயகியாக அறிமுகமான திரைப்படம் 'கேதர்நாத்'. டிசம்பர் 7, 2018 அன்று வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியில் படம் லாபகரமானதாக அமைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x