Last Updated : 14 Oct, 2020 05:13 PM

 

Published : 14 Oct 2020 05:13 PM
Last Updated : 14 Oct 2020 05:13 PM

புத்தம் புதுக் காலை படப்பிடிப்பு சுதந்திரமான அனுபவமாக இருந்தது: கல்யாணி ப்ரியதர்ஷன்

'புத்தம் புதுக் காலை' படப்பிடிப்பு தனக்கு சுதந்திர அனுபவமாக இருந்தது என நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் கூறியுள்ளார்.

பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி. புத்தம் புதுக் காலை என்கிற ஆந்தாலஜி திரைப்படம் அக்டோபர் 16 அன்று அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது. 5 குறும்படங்களின் தொகுப்பான இதில், 'இளமை இதோ இதோ' என்கிற குறும்படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்தப் படம், படப்பிடிப்பு அனுபவம் பற்றி கல்யாணி பேசியுள்ளார்.

"இந்தப் படம் நோய் தொற்றைத் தடுக்க போரப்பட்ட ஊரடங்கின் போது எடுக்கப்பட்டது. அப்போது முழு வீச்சில் படப்பிடிப்புகள் நடக்கவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டோம். படப்பிடிப்பில் அதிக நபர்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள். நடிகர்களாகிய எங்களுக்குச் சுவாரசியமான அனுபவமாக இருந்தது.

சிகை அலங்காரம், ஒப்பனைக்கு என தனிக் குழுவோ, உதவியாளர்களோ இல்லை. எங்களுக்கான குழு என்று வருபவர்களும் கிடையாது.

ஒரு புதிய படத்தை ஒப்புக்கொள்ளும் முன் நிறைய தயக்கம் இருக்கும். அதுவும் நமக்கான குழு அங்கு இல்லை என்றால். இந்த படப்பிடிப்புத் தளம் புதிது, மக்கள் புதியவர்கள். அப்படி இருக்கும் போது நமக்கான குழு தான் நமக்கு சவுகரியத்தைத் தருவார்கள்.

ஆனால் கோவிட்-19 அச்சம் காரணமாக அவர்களை (ஒப்பனை, சிகை அலங்கார குழு) வேலைக்கு வரச் சொல்லவில்லை.

நாம் தான் நம்மைப் பார்த்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் சாத்தியம் என்று தெரிந்ததே ஒரு நடிகையாக எனக்குச் சுதந்திரமான அனுபவமாக இருந்தது. கல்லூரியில் குறும்படம் எடுப்பது போல இருந்தது.

தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்த எனக்கு இந்த ஊரடங்கு மிகக் கடினமானதாக இருந்தது. இந்தப் படத்துக்காக நான் செலவிட்ட 3 நாட்கள் தான் என் மிகச் சிறந்த 3 நாட்கள். இல்லையென்றால் எனக்கு அதிகமாக போர் அடித்திருக்கும். எனக்கு அப்படிப் பழக்கம் கிடையாது. நான் ஒன்று பயணம் செய்து கொண்டிருப்பேன் அல்லது படப்பிடிப்பில் இருப்பேன்.

ஓடிடி தளங்கள் மூலம் நிறைய பேருக்கு உங்கள் படைப்பைக் காட்ட முடியும். அதற்கான ஆர்வத்தைத் தரும். இப்போது யார் திரையரங்குக்குச் சென்று படம் பார்ப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் பார்ப்பேன். ஏனென்றால் நான் ஒரு சினிமா பித்து. வெள்ளிக்கிழமைகளில் திரையரங்குக்குப் போகாமல் இருந்ததே இல்லை. ஆனால் இந்த காலகட்டத்தில் பலருக்கு ஓடிடி தளங்கள் புதிய படைப்புகளை அணுகச் சிறந்த வழியாக இருக்கும், குறிப்பாக மாநில மொழிப் படைப்புகளுக்கு, என்று நான் நினைக்கிறேன்" என்று கல்யாணி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x