Published : 14 Oct 2020 04:09 PM
Last Updated : 14 Oct 2020 04:09 PM

'யானை' அப்டேட்: நாயகியாக வரலட்சுமி ஒப்பந்தம்

சென்னை

தருண்கோபி இயக்கவுள்ள 'யானை' படத்தின் நாயகியாக வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'திமிரு', 'காளை' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தருண் கோபி. பின்பு நடிப்பில் சில காலம் கவனம் செலுத்தி வந்தவர், தற்போது மீண்டும் இயக்கம் பக்கம் திரும்பியுள்ளார். அவருடைய இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு 'யானை' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை ஆரூத் பிலிம் பேக்டரி சார்பில் மன்னங்காடு குமரேசன், தருண்கோபி குடும்பத்தார், எல்.எஸ்.பிரபுராஜா ஆகியோர் தயாரிக்கவுள்ளனர். 'மேற்குத்தொடர்ச்சி மலை' படத்தில் நாயகனாக நடித்த ஆண்டனி இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

தற்போது இந்தப் படத்தின் நாயகியாக வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 26-ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் ஆகிய ஊர்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு.

இந்தப் படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் தருண்கோபி, "ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது அந்த வீட்டுக்கு ஒரு மகளாகப் போக வேண்டும். அதேபோல் ஒரு ஆண் தான் பெண் எடுத்த வீட்டிற்கு ஒரு மகனாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் அந்த வீடு யானையை வளர்க்கும் அளவுக்குச் செல்வாக்கு மிக்க குடும்பமாக இருக்கும். அதுவே தலைகீழானால் பிரச்சினை யானையைவிடப் பெரியதாக இருக்கும். இந்தக் கருத்தை வைத்து உணர்வுபூர்வமாக, ஆக்‌ஷன், சென்டிமென்ட் கலந்த கதையை எழுதியிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

'யானை' படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x