Published : 14 Oct 2020 01:27 PM
Last Updated : 14 Oct 2020 01:27 PM

5 வருட நடிப்பு வாழ்க்கை என்னைப் பற்றிச் சொல்லாது: ரிச்சா

சென்னை

5 வருட நடிப்பு வாழ்க்கை என்னைப் பற்றிச் சொல்லாது என்று ரிச்சா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழில் சிம்பு, தனுஷ் ஆகிய இருவருக்கும் ஜோடியாக நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாயா. அதனைத் தொடர்ந்து திரையுலகிலிருந்து விலகி, வெளிநாட்டுக்குப் படிக்கச் சென்ற ரிச்சா தன்னுடன் படித்த ஜோவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதற்குப் பிறகும் கூட திரைத்துறையில் அவர் கவனம் செலுத்தவே இல்லை.

ஆனால், தொடர்ச்சியாக அவர் நடித்தப் படங்கள் குறித்து, கதாபாத்திரங்கள் குறித்து ரசிகர்கள் அவருடைய ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு கருத்து தெரிவித்து வந்தார்கள். இதற்கு பதிலளிக்கும் விதமாக ரிச்சா தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:

"8 வருடங்களுக்கு முன்னால் நடிப்பை நிறுத்திய நான், நடிகை என்பதைத் தாண்டி என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமல் இன்னும் அந்த கனவுலகில் தான் வாழ வேண்டும், என் திரைப்படங்கள் பற்றி பேச வேண்டும், அழகான புகைப்படங்களைப் பகிர வேண்டும் என்றே என்னை ட்விட்டரில் பின் தொடர்பவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

உங்கள் பொழுதுபோக்குக்காக என்னைக் காட்சிப் பொருளாக்குவதில் தான் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறது என்றால், எனது சிந்தனைகள், கொள்கைகள், எனது 5 வருட திரை வாழ்க்கையைத்தாண்டி ஒரு மனிதியாக நான் யார் என்பது பற்றியெல்லாம் உங்களுக்கு அக்கறை இல்லையென்றால், என்னை நீங்கள் பின் தொடர்ந்து உங்கள் நேரத்தை வீணாக்குவதில் அர்த்தமில்லை.

தனது நோக்கத்தை நிறைவேற்றும் முனைப்பில், தனது பல வகையான வாழ்க்கை அனுபவங்களிலிருந்து, மாறிக்கொண்டேயிருந்த தொழில் வாழ்க்கையிலிருந்து அறிவு பெற்றிருக்கும் ஒரு 34 வயது பெண்ணுடன், மரியாதைக்குரிய முறையில் உரையாடுபவர்களை நான் பாராட்டுகிறேன். எனது 34 வருட வாழ்க்கையில், 5 வருடத் திரைப்பட நடிப்பு வாழ்க்கை என்னைப் பற்றிச் சொல்லாது.

எனக்குத் தொடர்ந்து ஊக்கம் தரும், என் வாழ்க்கை பயணத்திலிருந்து ஊக்கம் பெறும் அனைவருக்கும் நன்றி. எனக்கென கருத்துகள் உள்ளன, நெறிகள் உள்ளன, மற்றவர் வாழ்க்கையை எட்டிப் பார்த்து சந்தோஷம் பெறுபவர்களுக்குப் பொழுதுபோகு தருவதை விட அதிக முக்கியத்துவம் தருவதற்கு எனக்கென வாழ்க்கை இருக்கிறது. என்னை ஒரு தனி நபராக நீங்கள் மதிக்கிறீர்கள் என்றால், என்னை நீங்கள் பின் தொடர்வதில் மகிழ்ச்சி”

இவ்வாறு ரிச்சா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x