Published : 13 Oct 2020 05:00 PM
Last Updated : 13 Oct 2020 05:00 PM

நான் உயிரோடு இருக்கும் வரை அனைவரின் விஷயங்களையும் வெளிக்கொண்டு வருவேன்; என் மீதும் வழக்குத் தொடருங்கள்: கங்கணா

பாலிவுட்டின் முன்னணித் தயாரிப்பு நிறுவனங்கள் செய்தி சேனல்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது குறித்து நடிகை கங்கணா ரணாவத் விமர்சித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து சில செய்தி ஊடகங்கள், பாலிவுட்டை ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்தும் விதமாக செய்திகளை ஒளிபரப்பியதை எதிர்த்து நான்கு பாலிவுட் சங்கங்களும், 34 பாலிவுட் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களும் வழக்குத் தொடர்ந்தன. இந்த சேனல்கள் பாலிவுட்டுக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் எதிராகப் பொறுப்பற்ற, இழிவான மற்றும் அவதூறான விஷயங்களைப் பேசுவதை நிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கங்கணா, "என் அசிங்கமான ரகசியங்களை நீ மறைத்து வை. நான் உன் ரகசியங்களை மறைத்து வைக்கிறேன் எனத் துறையில் எழுதப்படாத ஒரு விதி உள்ளது. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் விஸ்வாசமே இதன் அடிப்படையில் மட்டும்தான். நான் பிறந்ததிலிருந்தே திரைக் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு சிலர்தான் துறையை நடத்துகின்றனர். எப்போது இது மாறும்?.

போதை மருந்து, மோசடி, வாரிசு அரசியல், ஜிஹாத் ஆகிய விஷயங்கள் இருக்கும் சாக்கடையான பாலிவுட்டின் முகத்திரை கிழிந்துவிட்டது. இந்தச் சாக்கடையைச் சுத்தம் செய்வதை விட்டுவிட்டு பாலிவுட் பதிலுக்கு வழக்குத் தொடர்கிறதாம். என் மீதும் வழக்குத் தொடருங்கள். நான் உயிரோடு இருக்கும் வரை உங்கள் அனைவரின் விஷயங்களையும் வெளிக்கொண்டு வருவேன்.

பெரிய நாயகர்கள் பெண்களைக் காட்சிப் பொருளாக்குவது மட்டுமல்ல, இளம் பெண்களை ஏமாற்றுவார்கள். சுஷாந்த் சிங் ராஜ்புத் போன்ற இளைஞர்களை வளரவிடாமல், 50 வயதில் பள்ளிச் சிறுவனாக நடிக்க விரும்புவார்கள். தங்கள் கண் முன் தவறு நடந்தாலும் யாருக்காகவும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள்" என்று கங்கணா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுஷாந்தின் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, "ஒட்டுமொத்த தேசத்தின் முன்னால் அவமானப்படுத்தப்பட்டால், குறி வைக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்பது பாலிவுட்டின் சாக்கடையில் உழல்பவர்களுக்கு இப்போது தெரிந்திருக்கும். ஏன் ஒளிய வேண்டும், ஓட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் ஒரு ஓநாய் கூட்டம். தனியாக இருக்க வேண்டுமே என்ற உணர்வு மறைந்துவிடும் இல்லையா?" என்று பதிவிட்டுள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x