Published : 11 Oct 2020 04:35 PM
Last Updated : 11 Oct 2020 04:35 PM

வைரலான கிங் காங் பேட்டி: தொலைபேசியில் உறுதியளித்த ரஜினி

கிங் காங் பேட்டி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, தொலைபேசி வாயிலாக அவருக்கு உறுதியளித்துள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினி நடிப்பில் வெளியான 'அதிசயப் பிறவி' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் கிங் காங். அந்தப் படத்துக்குப் பிறகு பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். விஜய், அஜித் உள்ளிட்டவர்களின் படங்களில், அவர்களோடு நேரடிக் காட்சிகள் இல்லையென்றாலும் வடிவேலு காமெடிக் காட்சிகளில் நடித்திருப்பார்.

மாற்றுத்திறனாளி நடிகரான இவருக்கு 2009-ம் ஆண்டு தேசிய விருது வழங்கப்பட்டது. அப்போதிலிருந்து ரஜினியைச் சந்திக்க முயற்சி செய்து வருவதாகவும், ஆனால் முடியவில்லை என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கிங் காங் குறிப்பிட்டு இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் ரஜினி ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து இன்று (அக்டோபர் 11) காலை கிங் காங்கிடம் ரஜினி தொலைபேசி வாயிலாகப் பேசினார்.

இதுகுறித்து அறிய கிங் காங்கிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

"2009-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் துறை சார்பாக எனக்குத் தேசிய விருது கிடைத்தது. குடியரசு முன்னாள் தலைவர் பிரதீபா பாட்டீல் கையால் அந்த விருதை வாங்கினேன். மாற்றுத்திறனாளிகள் துறை சார்பாக தனித்திறமையைப் பாராட்டி எனக்கு அந்த விருதைக் கொடுத்தார்கள்.

தேசிய விருது வாங்கியவுடன் தலைவர் ரஜினி சாரிடம் காட்டி, அவரோடு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசை. அவரைக் காண்பதற்காக பல்வேறு முயற்சிகள் செய்தேன். ஆனால், அந்த விஷயம் அவரிடம் போய்ச் சேரவில்லை. நிறைய முறை முயற்சி செய்தும் தலைவரைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது.

சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அந்த விஷயத்தைச் சொன்னேன். அது எப்படியோ இணையத்தில் வைரலாகி, அந்த வீடியோவைத் தலைவர் ரஜினி சார் பார்த்திருக்கிறார். இன்று காலை ரஜினி சார் வீட்டிலிருந்து போன் வந்தது. 'சார் பேசுகிறார்' என்று கொடுத்தார்கள்.

'உங்க வீடியோவைப் பார்த்தேன். 10 வருடமாக என்னைப் பார்க்க முடியவில்லை, போட்டோ எடுக்க வேண்டும் என்று பேசியிருந்தீர்கள். நீங்கள் முயற்சி செய்யும்போது எனக்குச் சரியாக வந்து சேரவில்லை. இப்போது கரோனா அச்சுறுத்தலாக இருக்கிறது. அனைத்தும் சரியானவுடன் சொல்கிறேன். ஒரு நாள் சொல்கிறேன். குடும்பத்துடன் வாருங்கள்' என்று ரஜினி சார் கூறினார்.

இந்த வாய்ப்புக்காகத்தான் 10 ஆண்டுகள் முயற்சி செய்தேன். இப்போது ரஜினி சாரே குடும்பத்துடன் வாருங்கள் என்று சொல்லியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது".

இவ்வாறு கிங் காங் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x