Published : 10 Oct 2020 08:38 PM
Last Updated : 10 Oct 2020 08:38 PM

'சக்ரா' படப்பிடிப்பு நிறைவு: ஓடிடி வெளியீட்டில் மும்முரம்

'சக்ரா' படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஓடிடி வெளியீட்டுக்கான பணிகளில் படக்குழு கவனம் செலுத்தவுள்ளது.

புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சக்ரா'. ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதுதான் கரோனா அச்சுறுத்தலால் அனைத்துப் படப்பிடிப்புகளும் ரத்து என அறிவிக்கப்பட்டது. இதனால் 7 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டிய நிலையில், இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியது படக்குழு.

கரோனா ஊரடங்கு சமயத்திலேயே 'சக்ரா' படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஷால் அளித்த பேட்டியிலும், படம் தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகும் என்பதை உறுதி செய்தார்.

தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதியளித்துவிட்டதால், இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கியது படக்குழு. அக்டோபர் 5-ம் தேதி தொடங்கிய படப்பிடிப்பு இன்றுடன் (அக்டோபர் 10) நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஓடிடி வெளியீட்டிற்கான பணிகளைக் கவனிக்கவுள்ளது படக்குழு.

ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பை விரைவில் 'சக்ரா' படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஷால்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x