Published : 10 Oct 2020 07:17 PM
Last Updated : 10 Oct 2020 07:17 PM

ட்வீட்டால் உருவான சர்ச்சை; பாரதிராஜா அறிக்கைக்கு எதிர்வினை ஆற்றியிருக்கக் கூடாது: 'இரண்டாம் குத்து' இயக்குநர் வருத்தம்

தனது ட்வீட்டால் உருவான சர்ச்சைக்கு, 'இரண்டாம் குத்து' இயக்குநர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான படம் 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து'. தற்போது அதன் 2-ம் பாகமாக 'இரண்டாம் குத்து' என்ற படத்தை உருவாக்கியுள்ளார் சந்தோஷ் பி.ஜெயக்குமார். அதில் அவரே நாயகனாகவும் நடித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ஆகியவை இணையத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கின.

'இரண்டாம் குத்து' படத்துக்கு எதிராக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவர் அறிக்கை வெளியிட்ட சில நிமிடங்களில் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் தனது ட்விட்டர் பதிவில், "அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். 1981-ம் ஆண்டு 'டிக் டிக் டிக்' படத்தில் இதைப் பார்த்துக் கூசாத கண்ணு, இப்போது கூசிருச்சோ..?" என்று தெரிவித்து 'டிக் டிக் டிக்' படத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

சந்தோஷ் பி.ஜெயக்குமாரின் இந்தப் பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது சந்தோஷ் பி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"'இரண்டாம் குத்து' படத்தை இயக்கி, நடித்துள்ளேன். அதன் போஸ்டர்கள், டீஸருக்கு இயக்குநர் பாரதிராஜா எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையை படித்துவிட்டு வந்த கணத்தின் வெப்பத்தில், எனது ட்விட்டர் பதிவில் ஒரு ட்வீட் போட்டுவிட்டேன். அது அவசரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்தது. அதற்குப் பிறகு நாம் அவசரத்தில் இதைச் செய்திருக்கக் கூடாது என்று மனம் கூறியது. ஆகவே, நான் போட்ட ட்வீட்டிற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர் பாரதிராஜா. அவருடைய சாதனைகளில் 1 சதவீதமாவது நாம் செய்துவிட மாட்டோமா என்று பலரும் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு இயக்குநர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா வழிகாட்டியாக இருந்திருக்கிறார், இருக்கிறார், எப்போதும் இருப்பார். அவருடைய அறிக்கைக்கு நான் அவ்வாறு எதிர்வினையாற்றி இருக்கக்கூடாது.

இதற்கு அடுத்து வரும் போஸ்டர்கள், அனைத்துத் தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்."

இவ்வாறு சந்தோஷ் பி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x