Published : 10 Oct 2020 04:45 PM
Last Updated : 10 Oct 2020 04:45 PM

அகண்டன் - அடுத்தக் கட்டத்தை நோக்கி தமிழ் சினிமா

தமிழில் படம் செய்ய வரும் அனைவரும் அதன் வர்த்தக நிர்ப்பந்தங்களுக்கு பணிந்தே படம் எடுக்க வேண்டியுள்ளது. இந்த நிர்ப்பந்தத்துக்கு அடிப்படையாக இருப்பது தயாரிப்பு செலவு. போட்ட பணத்தை எடுக்க எதற்கும் வளைந்து கொடுக்க வேண்டிய நிலையில் படைப்பாளிகள் உள்ளனர். இதற்கு தீர்வளிக்கும் வகையில் வெளிவர உள்ளது 'அகண்டன்' திரைப்படம்.

'அகண்டன்' படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்திருப்பவர் சந்தோஷ் நம்பிராஜன். சர்வதேச அங்கீகாரம் பெற்ற 'டூலெட்' திரைப்படத்தின் ஹீரோ என்றால் சட்டென்று தெரியும். 'அகண்டன்' படத்தை முழுக்க செல்போனில் படமாக்கியிருக்கிறhர்கள்.

"ஐபோன் 11 ப்ரோ செல்போனில் அகண்டன் படத்தை எடுத்திருக்கிறோம். படத்தை திரையரங்கில் வெளியிடும் வகையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தியிருக்கிறோம். படத்தின் தரத்திற்காக ஃபிலிமிக் ப்ரோ என்ற செயலியையும் பயன்படுத்தியிருக்கிறோம்" என்றார் சந்தோஷ் நம்பிராஜன்.

செல்போனில் முழுநீள திரைப்படத்தை எடுப்பது புதிதல்ல. ஆனால், அப்படி எடுக்கப்படும் திரைப்படங்கள் வீடு, அறை என்று குறுகிய வட்டத்திலேயே பெரும்பாலும் படமாக்கப்படும். அந்த விஷயத்தில் 'அகண்டன்' பெருமளவு மாறுபட்டது என்கிறார் சந்தோஷ் நம்பிராஜன்.

"இதுவொரு கமர்ஷியல் குடும்பப் படம். சென்னையில் இரவுநேர கையேந்தி பவன் நடத்தி வருகிறவன்தான் நாயகன். வாடகைக்கு கடை எடுத்து நிலையான இடத்தில் தனது தொழிலை செய்ய வேண்டும், கல்லாவில் தனது மனைவியை உட்கார வைக்க வேண்டும் என்பது அவனுடைய கனவு. அதை தகர்க்கும்விதமாக ஒரு கொலைப்பழியில் அவன் சிக்கிக் கொள்கிறான். அதிலிருந்து விடுபட அவன் சிங்கப்பூர் செல்ல வேண்டியதாகிறது. அங்கிருந்து மலேசியாவுக்கும் செல்கிறான். இந்த பயணமும், கொலைப்பழியிலிருந்து அவன் எப்படி விடுபட்டான் என்பதும்தான் படத்தின் கதை."

அகண்டனின் கதை இந்தியாவில் தொடங்கி சிங்கப்பூர், மலேசியா என மூன்று நாடுகளில் பயணிக்கிறது. அதற்கேற்ப மூன்று நாடுகளின் நடிகர்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். சீன நடிகர் யாமீனுடன் ஹீரோ மோதும் சண்டைக் காட்சியும் படத்தில் உள்ளது.

"செல்போனில் எடுக்கப்பட்டது தெரியாதவகையில் அகண்டன் தயாராகியுள்ளது. படத்தில் நான்கு சண்டைக் காட்சிகள் உள்ளன. அகண்டனுக்கு கிடைக்கும் வரவேற்பு, செல்போனும் நல்ல கதையும் இருந்தால் ஒரு திரைப்படத்தை எடுக்கலாம் என்ற நம்பிக்கையை அளிக்கும்" என உறுதி தொனிக்க கூறினார் சந்தோஷ் நம்பிராஜன்.

அவர் சொல்வதை உறுதி செய்வதுபோல் படத்தின் டீஸர் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கமான கேமராவில் படமாக்கப்பட்டது போன்று சண்டைக் காட்சிகளும், சிங்கப்பூர், மலேசியாவின் எழில்மிகு வெளிப்புறக் காட்சிகளும் டீஸரில் இடம்பெற்றுள்ளன.

படத்தை சந்தோஷ் நம்பிராஜனும், அவரது சகோதரர் பிரேம்சந்த் நம்பிராஜனும் இணைந்து நம்பிராஜன் இன்டர்நேஷனல் சினிமாஸ் சார்பில் தயாரித்துள்ளனர். சிங்காவுட் என்ற சிங்கப்பூர் நிறுவனம் இணை தயாரிப்பு. படத்துக்கு சண்டிவீரன் புகழ் அருணகிரி இசையமைக்க, கோட்டீஸ்வரன் எம்.சுரேஷ் படத்தொகுப்பை செய்துள்ளார். ஹரிணி நாயகியாக நடித்தள்ளார்.

சந்தோஷ் நம்பிராஜன் நடித்துள்ள 'வட்டார வழக்கு' திரைப்படம் முடிந்து திரையரங்கில் வெளியாக தயாராக உள்ளது. அகண்டனை தீபாவளிக்கு வெளியிடும் முயற்சியில் உள்ளனர். இதைத் தவிர' யோலோ' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. அத்துடன் நம்பி சினிமா ஸ்கூல் மாணவர்கள் சொன்ன கதையை நம்பிராஜன் இன்டர்நேஷனல் சினிமாஸ் தயாரிக்கிறது.

"எங்களுடைய தயாரிப்பில் திறமைவாய்ந்த இயக்குநர்களையும், நடிகர்களையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். நல்ல சினிமாவை ஆதரிக்கும் ரசிகர்கள், ஊடகவியாளர்கள் ஒத்துழைப்பில் அதனை திறம்பட செய்ய முடியும் என நம்புகிறேன்" என்றார் சந்தோஷ் நம்பிராஜன்.

அகண்டனுக்கு கிடைக்கும் வரவேற்பு, நல்ல கதையும், ரசனையும் கொண்டவர்கள் தயாரிப்பு செலவால் முடங்கிப் போகாமல் துணிந்து படமெடுக்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x