Published : 09 Oct 2020 03:46 PM
Last Updated : 09 Oct 2020 03:46 PM

பல்வேறு கோயில்களில் சாமி தரிசனம் செய்த சிம்பு

மதுரை

சுசீந்திரன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு பல்வேறு கோயில்களில் சாமி தரிசனம் செய்துள்ளார் சிம்பு

'மாநாடு' படத்துக்கு முன்னதாக சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிம்பு. இதன் படப்பிடிப்பு திண்டுக்கலில் தொடங்கிவிட்டாலும், நாளை (அக்டோபர் 10) முதல் சிம்புவின் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.

தற்போது 14 கிலோவுக்கு மேல் குறைத்து மிகவும் உடல் இழைத்துவிட்டார் சிம்பு. அவருடைய புதிய தோற்றம் இன்னும் வெளியாகவில்லை. கேரளாவில் முழுமையாக உடல் ரீதியான சிகிச்சையை முடித்துவிட்டு, பல்வேறு கோயில்களில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

நேற்று (அக்டோபர் 9) திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது அங்கிருக்கும் பத்திரிகையாளர்கள் பலரும் சிம்பு நடந்துவருவதை வீடியோ, புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது யாருக்குமே தன்னுடைய லுக் வெளியே தெரியக் கூடாது என்று துண்டை வைத்து முழுமையாக முகத்தை மூடிக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து இன்று (அக்டோபர் 9) காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார் சிம்பு. அப்போதும் பலரும் புகைப்படம் எடுக்கவே, முழுமையாக முகத்தை மூடிக் கொண்டுள்ளார். ஆனாலும், அந்தப் புகைப்படத்தை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்து வருகிறார். தற்போது பாரதிராஜா சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தான் சுசீந்திரன் படமாக்கி வருகிறார். ஒளிப்பதிவாளராக திரு பணிபுரிந்து வருகிறார்.

சுசீந்திரன் படத்துக்காக முழுக்க தாடி வளர்த்து தயாராகியுள்ளார் சிம்பு. அதனால் தனது லுக் எந்தவொரு காரணத்தைக் கொண்டு வெளியாகி விடக்கூடாது என முடிவு செய்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் கூட செல்போன்களுக்கு அனுமதியில்லை.

சுசீந்திரன் படத்தை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டு, நவம்பர் முதல் வாரத்தில் 'மாநாடு' படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் சிம்பு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x