டொவினோ தாமஸ் உடல்நிலை சீராக உள்ளது; ரத்தப்போக்கு அறிகுறிகள் இல்லை: மருத்துவமனை தகவல்

டொவினோ தாமஸ் உடல்நிலை சீராக உள்ளது; ரத்தப்போக்கு அறிகுறிகள் இல்லை: மருத்துவமனை தகவல்

Published on

டொவினோ தாமஸ் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ரோஹித் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்து வரும் மலையாளத் திரைப்படம் 'களா'. இந்தப் படத்துக்காக சண்டைக்காட்சி ஒன்றைப் படமாக்கினார்கள். அப்போது டொவினோ தாமஸுக்கு அடிவயிற்றில் காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டொவினோ, அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வருகிறது. அவருடைய உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தாலும், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் எதுவுமே தெரிவிக்கப்படாமல் இருந்தது.

தற்போது டொவினோ தாமஸ் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

''டொவினோ தாமஸ் எங்கள் மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் அக்டோபர் 7-ம் தேதி காலை 11.15 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் கடும் வயிற்று வலி இருந்தது, உடனே அவருக்கு சிடி ஆஞ்சியோகிராம் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு ‘வயிற்றுக்குள் குடலைச் சுற்றியுள்ள கொழுப்புச்சத்தில் ரத்தக்கட்டு (Mesenteric Haematoma)’ இருப்பது தெரியவந்தது.

அவருக்கு ரத்தப்போக்கு இல்லை என்பதால் 48 மணி நேரக் கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருடைய ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவருக்கு ஆன்ட்டிபயாடிக்குகள் மூலம் சிகிச்சை அளித்து வருகிறோம்.

கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை சீராக உள்ளது. மீண்டும் ரத்தப்போக்கு ஏற்படும் அறிகுறிகள் இல்லை. 48 மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு சி.டி. ஆஞ்சியோகிராம் எடுக்கவிருக்கிறோம். அதுவரை அவர் ஐசியுவில் கண்காணிப்பில் இருப்பார். அவரது உடல்நிலை மோசமடைந்தால் உடனடியாக அவருக்கு லேப்ராஸ்கோபி அறுவைசிகிச்சை செய்வோம். இப்போதைக்கு அவர் உடல் நிலை திருப்திகரமாக உள்ளது".

இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in