Published : 08 Oct 2020 02:40 PM
Last Updated : 08 Oct 2020 02:40 PM

2021 பொங்கல் வெளியீடு: 'மாஸ்டர்' Vs ’சுல்தான்’

2021-ம் ஆண்டு பொங்கலுக்கு 'மாஸ்டர்' மற்றும் 'சுல்தான்' ஆகிய படங்கள் போட்டியிடவுள்ளன.

கரோனா அச்சுறுத்தலால் சுமார் 150 நாட்களுக்கு மேலாக எந்தவொரு புதிய படமும் வெளியாகவில்லை. மத்திய, மாநில அரசுகள் சில தினங்களுக்கு முன்புதான் படப்பிடிப்புகளுக்கு அனுமதியளித்துள்ளன. இதனால் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகளால் நின்ற படங்கள் அனைத்துமே தங்களுடைய பணிகளைத் தொடங்கியுள்ளன.

மேலும், இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடத் திட்டமிடப்பட்ட படங்கள் யாவுமே வெளியாகவில்லை. இதனால், தயாரிப்பாளர்களுக்குக் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பல படங்கள் ஓடிடி வெளியீட்டுக்கு விற்கப்பட்டு, வெளியாகியுள்ளன. இதில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படம் மட்டுமே திரையரங்க வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறது.

தற்போது மத்திய அரசு திரையரங்குகளைத் திறக்க அனுமதியளித்துவிட்டாலும், மாநில அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. ஆகையால், நவம்பர் மாதத்தில்தான் திரையரங்குகள் திறக்க வாய்ப்புள்ளது. அப்படித் திறக்கப்பட்டாலும், 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு தான் 'மாஸ்டர்' வெளியீடு எனப் படக்குழு முடிவு செய்துள்ளது.

இதனிடையே, தற்போது 'மாஸ்டர்' படத்துக்குப் போட்டியாக 'சுல்தான்' படமும் வெளியாகும் எனத் தெரிகிறது. ஏனென்றால், 'சுல்தான்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை சென்னையில் முடித்துவிட்டது படக்குழு. அதோடு ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கார்த்தி தனது ட்விட்டர் பதிவில், "படப்பிடிப்பு முடிந்தது. மூன்று வருடங்களுக்கு முன் இந்தக் கதையைக் கேட்ட தினத்திலிருந்து இன்று வரை இந்தக் கதை எங்களுக்கு உற்சாகத்தைத் தந்து வருகிறது. இதுவரை நான் நடித்திருக்கும் படங்களில் பிரம்மாண்ட தயாரிப்பு இதுதான். இதில் சிறந்த முயற்சியோடு பணியாற்றிய ஒட்டுமொத்தக் குழுவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

'சுல்தான்' படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ''படப்பிடிப்பு முடிந்துவிட்டது. நல்லதொரு பண்டிகை வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறேன்'' என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 'மாஸ்டர்' மற்றும் 'சுல்தான்' ஆகிய படங்கள் 2021-ம் ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் எனத் தெரிகிறது.

முன்னதாக, 2019-ம் ஆண்டு 'பிகில்' மற்றும் 'கைதி' ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகின. தற்போது மீண்டும் விஜய் மற்றும் கார்த்தி படங்கள் ஒரே தேதியில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு சுவாரசியம் அடங்கியுள்ளது. என்னவென்றால் 'பிகில்' படத்துக்குப் போட்டியாக வெளியான 'கைதி' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்திருந்தது. தற்போது 'மாஸ்டர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அந்தப் படத்துக்கு எதிராக ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள 'சுல்தான்' படத்தை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x