Published : 06 Oct 2020 07:34 PM
Last Updated : 06 Oct 2020 07:34 PM

'வர்மா' படம் எப்படி?- நெட்டிசன்கள் தாக்கு

ஓடிடியில் வெளியாகியுள்ள 'வர்மா' படத்தை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாகச் சாடியுள்ளனர்.

தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியது இ4இ என்டர்டெயின்மென்ட் நிறுவனம். விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க, பாலா இயக்கத்தில் தொடங்கப்பட்ட இப்படத்துக்கு 'வர்மா' என்று பெயரிடப்பட்டது. இந்தப் படத்தின் இறுதி வடிவத்தைப் பார்த்த தயாரிப்பாளர் படத்தை வெளியிடாமல் கைவிட்டார்.

பின்பு, 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாயா இயக்கத்தில் துருவ் விக்ரம், பனிடா சந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்க 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இந்தப் படம் வெளியாகி விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றாலும், வசூல் ரீதியாகச் சோபிக்கவில்லை.

இதனிடையே, கரோனா அச்சுறுத்தல் காலத்தில் பல்வேறு படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவொரு நல்ல வாய்ப்பாக உள்ளதே என்று 'வர்மா' படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. இந்தியாவுக்கு வெளியே சில ஓடிடி தளங்களிலும், இந்தியாவுக்குள் சில ஓடிடி தளங்களிலும் இன்று (அக்டோபர் 6) 'வர்மா' வெளியானது.

பாலா இயக்கத்தில் 'அர்ஜுன் ரெட்டி' எப்படியிருக்கிறது என்று தெரிந்துகொள்ளப் பலரும் ஆவலுடன் பார்த்துள்ளனர். 1 மணி நேரம் 54 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய படமாக 'வர்மா'வை இயக்கியுள்ளார் பாலா. படத்தைப் பார்த்தவர்கள் பலருமே, இது பாலா இயக்கிய படம் தானா என்று தங்களுடைய கருத்துகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

சிலரைத் தவிர ஒட்டுமொத்தமாக 'வர்மா' படத்தை மிகவும் தாக்கியே கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். சிலர் 'வர்மா' படத்தின் சிறு சிறு காட்சிகளை ட்விட்டர் வீடியோவாக வெளியிட்டுக் கிண்டல் செய்யத் தொடங்கியுள்ளனர். மேலும், விக்ரம் மற்றும் தயாரிப்பாளர் எதற்காக 'வர்மா' படத்தை வெளியிடாமல் விட்டார்கள் என்று இப்போது புரிகிறது என்பதுதான் பலருடைய கருத்தாக இருக்கிறது.

'அர்ஜுன் ரெட்டி' கதையின் முக்கியமான காட்சிகள் எதுவுமே 'வர்மா' படத்தில் இல்லை என்று தெரிவித்துள்ளனர். அதே வேளையில், 'வர்மா' படத்தில் ஈஸ்வரி ராவ் கதாபாத்திர சேர்ப்பு மற்றும் அதன் வடிவமைப்புக்கு மட்டுமே சிலர் பாலாவைப் பாராட்டியுள்ளனர். பல்வேறு கருத்துகள் குவிந்ததால் #Varmaa என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

'வர்மா' படம் கைவிடப்பட்ட பிறகு, பாலா இதுவரை தனது அடுத்த படத்தை அறிவிக்கவில்லை. நீண்ட நாட்களாகவே கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தாலும், யார் நடிக்கவுள்ளார்கள் என்ற தகவல் கூட இன்னும் வெளியாகவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x