Published : 06 Oct 2020 12:43 PM
Last Updated : 06 Oct 2020 12:43 PM

தருண்கோபி இயக்கும் ‘யானை’

விஷால் - ஸ்ரேயா ரெட்டி நடித்த ‘திமிரு’ படத்தை இயக்கியவர் தருண்கோபி. அதன் பின்னர் சிம்பு நடித்த ‘காளை’ படத்தை இயக்கிய அவர் ராசுமதுரவன் இயக்கத்தில் ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தில் கதையின் நாயகனாக நடித்தார்.

தொடர்ந்து நடித்துக்கொண்டே இயக்க முடிவெடுத்து 'திமிரு - 2' படத்தைத் தொடங்கினார். அப்படத்துக்கு ‘வெறி’ என்று தலைப்பு வைத்திருக்கிறார். இன்னொரு பக்கம் தருண்கோபி இயக்கத்தில் ‘அருவா’ படத்தின் பின் தயாரிப்பு வேலைகளும் நடந்து வருகின்றன.

இந்த இரண்டு படங்களும் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் நிலையில் ‘யானை’ என்ற தனது அடுத்த படத்தை தருண்கோபி இயக்கவுள்ளார். இந்தப் படத்தை ஆரூத் பிலிம் பேக்டரி சார்பில் மன்னங்காடு குமரேசன், தருண்கோபி குடும்பத்தார், எல்.எஸ்.பிரபுராஜா ஆகியோர் தயாரிக்கவுள்ளனர்.

'மேற்குத்தொடர்ச்சி மலை' படத்தில் நாயகனாக நடித்த ஆண்டனி இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். முன்னணி நடிகை ஒருவர் கதையின் நாயகியாக நடிக்கவிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது.

‘யானை’ படம் பற்றி இயக்குனர் தருண்கோபியிடம் கேட்டபோது, “ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது அந்த வீட்டுக்கு ஒரு மகளாகப் போக வேண்டும். அதேபோல் ஒரு ஆண் தான் பெண் எடுத்த வீட்டிற்கு ஒரு மகனாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் அந்த வீடு யானையை வளர்க்கும் அளவுக்குச் செல்வாக்கு மிக்க குடும்பமாக இருக்கும். அதுவே தலைகீழானால் பிரச்சினை யானையைவிடப் பெரியதாக இருக்கும். இந்தக் கருத்தை வைத்து உணர்வுபூர்வமாக, ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த கதையை எழுதியிருக்கிறேன்.

ராசு மதுரவன் அண்ணா விட்ட இடத்திலிருந்து குடும்ப உணர்வுகளைச் சித்தரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அது அந்த அற்புத இயக்குநருக்கான அஞ்சலியாக இருக்கும். இம்மாத இறுதியில் பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, திண்டுக்கல் போன்ற இடங்களில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை நடித்தி முடிக்க இருக்கிறோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x