Published : 06 Oct 2020 06:57 AM
Last Updated : 06 Oct 2020 06:57 AM

பாலிவுட் நடிகை பூஜா பேடியின் மின்னணு வர்த்தக தளம் மீண்டும் முடக்கம்: பணம் கேட்டு மிரட்டும் ஹேக்கர்கள்

பாலிவுட் நடிகை பூஜா பேடியின் மின்னணு வர்த்தக (இ-காமர்ஸ்) தளத்தை ஹேக்கர்கள் முடக்கி, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தராவிட்டால் அத்தளத்தில் போதைப் பொருள் விற்பனை செய்யப் போவதாக அச்சுறுத்தி உள்ளனர்.

பாலிவுட் முன்னாள் நடிகையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவருமான பூஜா பேடி, கோவாவில் வசிக்கிறார். தனது கணவருடன் சேர்ந்து தொழில் செய்து வருகிறார். இவர் கோவா காவல் துறை இயக்குநருக்கு நேற்று ட்விட்டரில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

எனது மின்னணு வர்த்தக இணையதளம் (http://happysoul.in) ஹேக்கர்களால் ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. இம்முறை நான் பணம் தராவிட்டால் போதைப் பொருள் விற்பனைக்கு அத்தளத்தை பயன்படுத்தப் போவதாக மிரட்டுகின்றனர். எனது இணைய தளம் முடக்கம் தொடர்பாக ஏற்கெனவே, கோவா முதுநகர் காவல் நிலையத்தின் சைபர் குற்றப் பிரிவில் கடந்த வாரம் புகார் அளித்திருந்தேன். ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனது நிறுவனம் கோவாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பூஜா பேடி கூறியுள்ளார்.

இப்புகார் மீது கோவா காவல் துறையின் சைபர் குற்றப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.

பூஜா பேடி மற்றொரு பதிவில், தனது நிறுவனம் ஹேக்கர்களால் குறி வைக்கப்படுவது இது முதல்முறை அல்ல என்று கூறியுள்ளார். பூஜா பேடி இதற்கு முன் கடந்த மே மாதம் கோவாவில், கரோனா தனிமைப்படுத்தப்படும் மையங்களின் அவல நிலை குறித்த தொடர் பதிவுகளால் ஊடகங்களின் கவனத்தை பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x