Published : 04 Oct 2020 05:16 PM
Last Updated : 04 Oct 2020 05:16 PM

நான் நினைத்த அளவுக்கு உன்னதமானவன், உறுதியானவன் கிடையாது: மாதவன் ஓப்பன் டாக்

நான் நினைத்த அளவுக்கு உன்னதமானவன், உறுதியானவன் கிடையாது என்று மாதவன் தெரிவித்துள்ளார்

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'நிசப்தம்'. கோனா வெங்கட் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 2-ம் தேதி வெளியானது.

'நிசப்தம்' படத்தை விளம்பரப்படுத்த மாதவன் பேட்டி அளித்துள்ளார். அதில் "ஊரடங்கு முடிந்ததும் என்ன செய்வீர்கள்?" என்ற கேள்விக்கு மாதவன் கூறியிருப்பதாவது:

"ஊரடங்கு ஆரம்பமானபோது 10 நாட்கள் என்றார்கள். குடும்பத்துடன் செலவிட நேரம் கிடைத்ததே என்று அனைவரும் சந்தோஷப்பட்டோம். 3 மாதங்களுக்குப் பிறகு எப்போது அந்த குடும்பத்தை விட்டு வெளியே வருவோம் என்கிற அளவு பலருக்கு வெறுத்துவிட்டது. இப்போது மக்கள் வீட்டிலேயே அடங்கியிருப்பதால் பலவிதமான உணர்வுகளை அனுபவித்து, அவர்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டு வருகின்றனர்.

கடந்த 7 மாதங்களில் நான் என்னைப் பற்றி சில விஷயங்கள் உணர்ந்து கொண்டேன். நான் நினைத்த அளவு நான் உன்னதமானவன் கிடையாது, நான் நினைத்த அளவு உறுதியானவன் கிடையாது, நான் நினைத்த அளவு படைப்பாற்றல் எனக்கில்லை என்பதெல்லாம் தெரிந்தது.

இது போன ஒரு காலகட்டம் நம்மை திடீரென உலுக்கி, வாழ்க்கையில் உண்மையில் எது முக்கியம் என்பதைக் காட்டுகிறது. அது மாறிக்கொண்டும் இருக்கிறது. 4 மாதங்களுக்கு முன் எது முக்கியம் என்று நினைத்தேனோ அதற்கு இப்போது அர்த்தமில்லை. எனவே எல்லோரும் ஒருவித அழுத்தத்தில் இருக்கின்றனர் என்பதை உணர்ந்தேன். எனவே என்னால் முடிந்த குறைந்தபட்ச உதவி, மற்றவர்களின் வாழ்க்கையைச் சற்று லேசாக்குவதுதான்.

நான் இருக்கும் இடங்களில், சமூக வலைதளங்களில் நேர்மறையாக இருக்கிறேன். பயம், எதிர்காலம் எப்படி இருக்கும் என்கிற கேள்வி எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால் துணிச்சலுடன் இருந்து அனைத்தையும் கையாள வேண்டும். இவ்வளவு மன அழுத்தத்தில் இருக்கும் சமூகத்துக்கு எது பிடிக்கும் என்பது தெரியாது. ஆனால் அதை யோசித்து அதற்கேற்றார் போல படம் நடிப்பது தான் வெற்றியைத் தரும் என்று நினைக்கிறேன்.

என்ன சொல்ல வருகிறேன் என்றால், ஊரடங்கு ஆரம்பித்த காலத்தில் எல்லா திரைப்படங்களையும் பார்த்துவிட வேண்டும், த்ரில்லர், திகில், ஆக்‌ஷன், மர்மம் என எல்லா வகையான படமும் பார்ப்போம் என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் நாட்கள் ஆக ஆக, உங்களுக்குச் சந்தோஷத்தைத் தரும், ஏற்கனவே நீங்கள் பார்த்த மைக்கேல் மதன காமராஜன் போன்ற நகைச்சுவைப் படங்களை, மாயாஜாலப் படங்களைப் பார்க்க வேண்டும் என்றே விரும்பியிருப்பீர்கள். எல்லா குடும்பங்களிலும் இது நடந்திருக்கிறது.

எனவே ஊரடங்கு முடிந்து ஆக்‌ஷன் படமோ, சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய படமோ நான் கொடுக்க விரும்பவில்லை. அது போன்ற படங்கள் வரும், ஆனால் நான் நகைச்சுவையான, மக்களை மகிழ்விக்கும் படத்தையே தர விரும்புகிறேன். இண்டியானா ஜோன்ஸ் போல குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு படமாக"

இவ்வாறு மாதவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x