Published : 01 Oct 2020 01:51 PM
Last Updated : 01 Oct 2020 01:51 PM

'மன்மதன்' தயாரிப்பாளர் காலமானார்: சிம்பு இரங்கல்

'மன்மதன்' தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மறைவுக்கு சிம்பு இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிம்பு நடிப்பில் வெளியான 'மன்மதன்', தனுஷ் நடிப்பில் வெளியான 'திருடா திருடி', 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்', விக்ரம் நடிப்பில் வெளியான 'கிங்', துஷ்யந்த் நடித்த 'மச்சி' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் எஸ்.கே.கிருஷ்ணகாந்த். விவேக் நாயகனாக நடித்த படத்தையும் தயாரித்துள்ளார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.

இவர் தயாரிப்பில் வெளியான 'மன்மதன்' மற்றும் 'திருடா திருடி' ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவையாகும். இதர படங்கள் தோல்வியால், தயாரிப்பதை நிறுத்தினார். அதற்குப் பிறகு பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

சாலிகிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்த வந்த கிருஷ்ணகாந்துக்கு நேற்று (செப்டம்பர் 30) திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்கள். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் இருக்கிறார்கள்.

சிம்பு இரங்கல்

'மன்மதன்' தயாரிப்பாளர் மறைவை முன்னிட்டு சிம்பு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"நல்ல மனிதர்களை இழந்து வருகிறோம். 'மன்மதன்' படம் என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்களைக் கொண்டது. என் மீது மிகுந்த அன்பு கொண்டவர் கிருஷ்ணகாந்த் அவர்கள். 'மன்மதன்' படத்தை என் மீது நம்பிக்கை வைத்து இயக்கச் சொன்னவர். நீங்க ஸ்கிரிப்ட் பண்ணுங்க ..இயக்குங்க என உற்சாகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்ட நல்ல மனிதர். அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கலங்க வைக்கிறது. அவரது இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் மடியில் அந்த நல்ல ஆத்மா அமைதி கொள்ளட்டும்"

இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x