Published : 29 Sep 2020 02:56 PM
Last Updated : 29 Sep 2020 02:56 PM

நான் நினைத்தது போல் 'ராக்கெட்ரி' படத்தை எடுத்துள்ளேன்: மாதவன் மகிழ்ச்சி

நான் நினைத்தது போல் 'ராக்கெட்ரி' படத்தை எடுத்துள்ளேன் என்று மாதவன் பேட்டியளித்துள்ளார்.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நிசப்தம்'. கோனா வெங்கட் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகியுள்ளது. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகவுள்ளது.

'நிசப்தம்' படத்தை விளம்பரத்தை விளம்பரப்படுத்த மாதவன் பேட்டியளித்துள்ளார். அதில் "ஓடிடி தளத்தில் மாதவனை இயக்குநராகக் காண முடியுமா" என்ற கேள்விக்கு அவர் கூறியிருப்பதாவது:

"ஓடிடி தளங்கள் புதிய மாற்றமாக வரப் போகிறது என்பது 10 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். அதற்கான நடவடிக்கைகளில் நாங்கள் இருந்தோம். இயக்குநர் சுதா கொங்கராவிடம் சொன்னபோது முதலில் அவர் நம்பவே இல்லை. இப்போது, 'எப்படி சொன்ன?' என்று கேட்கிறார். ஓடிடி தளத்தில் அனைவருமே பணிபுரியத் தொடங்கிவிட்டார்கள். மணி சாரே ஓடிடிக்கு வந்துவிட்டார்.

இப்போதுள்ள நடிகர்கள் வெறும் நடிகர்களாக அல்லாமல் சிறந்த பிசினஸ்மேனாக இருக்க வேண்டும். அதேபோல் இயக்குநராக ஆகக் கூடிய திறமை எனக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. 'ராக்கெட்ரி' படமே இறுதிக்கட்டக் கட்டாயத்தால் இயக்கியிருக்கிறேன். அந்தப் படம் எப்படி வந்துள்ளது என்பது கடவுளுக்குத்தான் தெரியும். ஆனால், நினைத்த மாதிரி படத்தை எடுத்துவிட்டேன் என்பது தெரியும். ஆகையால் இப்போதைக்கு ஓடிடியில் இயக்குநராகமாட்டேன் என்று மட்டும் சொல்லலாம்”.

இவ்வாறு மாதவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x