சுகுமார் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா

சுகுமார் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா

Published on

சுகுமார் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

'ரங்கஸ்தலம்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டார் இயக்குநர் சுகுமார். அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் 'புஷ்பா' படத்தை இயக்க ஆயத்தமானார். ஆனால், கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு தள்ளிப்போனது.

'புஷ்பா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் பெரும் வைரலானது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளிலும் ஒரே சமயத்தில் தயாராகவுள்ளது. ஆகையால், பல மொழிகளிலிருந்தும் இந்தப் படத்துக்கு நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்னும் 'புஷ்பா' படமே தொடங்கப்படவில்லை. அதற்குள் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை கேதார் சிலகம்ஷெட்டி தயாரிக்கவுள்ளார்.

இன்று (செப்டம்பர் 28) விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தக் கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு 'புஷ்பா' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, 2022-ல் விஜய் தேவரகொண்டா படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் இயக்குநர் சுகுமார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in