Last Updated : 26 Sep, 2020 11:51 AM

 

Published : 26 Sep 2020 11:51 AM
Last Updated : 26 Sep 2020 11:51 AM

போதைப் பொருள் வழக்கில் ரன்வீர் சிங்கிடமும் விசாரணையா? - என்சிபி அதிகாரிகள் விளக்கம் 

போதைப் பொருள் வழக்கு விசாரணையில் ஆஜராக அனுமதி கோரி ரன்வீர் சிங்கிடமிருந்து தங்களுக்கு எந்த மெயிலும் வரவில்லை என்று என்சிபி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ மேற்கொண்ட விசாரணையில், அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்திக்கு போதைப் பொருள் விற்பனைக் கும்பலுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இந்த விவகாரம் குறித்து மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில், ரியா சக்கரவர்த்தி, அவரது சகோதரர் உட்பட 12-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பிரபல பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரதா கபூர், ரகுல் ப்ரீத் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு நேற்று முன்தினம் சம்மன் அனுப்பியது. இவர்களில் ரகுல் ப்ரீத் சிங் நேற்று விசாரணைக்கு ஆஜராகி அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.

தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரதா கபூர் ஆகியோர் இன்று (26.09.20) போதைப் போருள் தடுப்புப் பிரிவு போலீஸார் முன் இன்று ஆஜராகவுள்ளனர்.

இந்நிலையில் நடிகரும் தீபிகாவின் கணவருமான ரன்வீர் சிங்கிடமும் என்சிபி விசாரணை நடத்தவுள்ளதாகவும், தன் மனைவியின் விசாரணையின்போதே தானும் ஆஜராக அனுமதி கோரியுள்ளதாவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்தச் செய்திக்கு போதைப் போருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''சம்மன் அனுப்பிய யாரிடமிருந்தும் எங்களுக்கு எந்தவிதக் கோரிக்கையும் இதுவரை வரவில்லை. இன்று விசாரணைக்காக ஆஜராக ஒப்புக்கொண்டு அனுப்பப்பட்ட மெயிலே எங்களுக்குக் கடைசியாக வந்துள்ளது'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x